பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69. சத்தியத்தின் பிரதிநிதியாய்

கிளியோபாத்ராவின் மூக்கு இன்னும் சிறிது நீண்டோ, குறைந்தோ அமைந்திருந்தால் ஒரு சாம்ராஜ்யத்தின் வரலாறே மாறிப் போயிருக்கும் என்று சொல்கிறார்கள் அல்லவா?

மல்லிகை நகர் டாக்டர் சிவசங்கரன் எப்.ஆர்.ஸி.எஸ். அவர்களின் மகள் வசந்தாவுக்கு இப்போது வாய்த்திருந்த கண்கள் இன்னும் சிறிது அகலமாகவோ, குறுகியோ அமைந்திருந்தால் ஒரு நகரத்தில் ஒரு பெரிய கல்லூரியின் ஆயிரத்து இருநூறு மாணவர்களுக்கு வாழ்க்கை சுவாரஸ்யமில்லாமல் போயிருக்கும். கிளியோபாத்ரா விவகாரத்தைப் போல, இது ஒரு சாம்ராஜ்யத்தைப் பாதிக்கக் கூடிய விஷயமில்லையாயினும் பல பேருடைய ரசிகத் தன்மைக்கு நஷ்டத்தை உண்டாக்கக் கூடியதாயிருக்கும் இது. உடனே நீங்கள் இந்திய அரசாங்கத்தின் டூரிஸ்ட் அலுவலக வெளியீட்டுப் பிரதாபங்களையோ, ரோடு மேப்பையோ எடுத்து வைத்துக் கொண்டு மல்லிகை நகரத்தைத் தேடிக்கொண்டிருக்க வேண்டாம்!

மல்லிகை நகர் என்பது ஒரு பெரிய நகரத்தின் கண்டோன்மெண்ட் பகுதிக்குப் பெயர். பின் என்ன? ‘அரிஸ்டாக்ரடிக்குகள்’ வாழ்கிற இடத்துக்கு அரளி நகர் என்றும் துளஸி நகர் என்றுமா பேர் வைத்துக் கொண்டிருப்பார்கள்? பேரே மணக்க மணக்க அமைய வேண்டும் என்று இப்படி வைத்திருந்தார்கள். இதைத் தவிர இந்தப் பேருக்கும் அந்தக் கண்டோன்மெண்டுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

டாக்டர் சிவசங்கரன் மலையாளி. பாரதப் புழாவின் கரையில் திருச்சூருக்கும் பாலக்காட்டுக்கும் நடுவில் ஏதோ ஒரு சிறிய கிராமத்தைப் பூர்வீகமாக உடையவர் அவர் கொச்சி எக்ஸ்பிரஸில் புறப்பட்டால், ஒலவக்கோட்டில் இறங்கி அந்த ஊருக்குப் போகும் படி அருகில் இருக்கிற ஸ்டேஷன் எதுவோ, அதில் கொச்சி எக்ஸ்பிரஸ் நிற்காது என்கிற அளவுக்குப் புகழில்லாத ஊர் அது. அதற்குப் புகழில்லை என்பதற்காகச் சிவசங்கரன் கவலைப்பட்டகாலம் மலையேறி விட்டது.சிவசங்கரனாக இருந்த வரை அவர் ஊரைப் பற்றிக் கவலைப்பட்டார். சிவசங்கரன் எப்.ஆர்.ஸி.எஸ். ஆன பிறகு தம்முடைய பேரைப் பற்றியே அவர் அதிகமாகக் கவலைப் பட வேண்டியிருந்ததனால், ஊரைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு விட்டார். ஒரே சமயத்தில் பல காரியங்களுக்குக் கவலைப்பட்டால் ‘ஹிஸ்டீரியா’ போன்ற வியாதிகள் எல்லாம் வரலாம் என்று அவருடைய எம்.பி.பி.எஸ் மூளைக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் பாரதப் புழையாற்றின் கரையிலிருந்து நானூறு மைலுக்கு இப்பால் உள்ள தமிழ்நாட்டு நகரத்திலேயே பிறந்து தமிழ் நாட்டுச் சூழ்நிலையிலேயே வளர்ந்த