பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

524நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

அவளிடமிருந்து தேவையில்லை. ஆனால் பிற்பகலில் தபால் வாங்குவதற்காகக் கொச்சம்மணி கீழே இறங்கி வந்தாள்.

தபாலில் வழக்கத்துக்கு மாறாக ஒரே மலையாள வாரப் பத்திரிகையின் இரண்டு வேறு பிரதிகள் இருக்கவே இன்னொன்று யாருக்காக வந்திருக்கும் என்று அறிவதற்காக முகவரியைப் பார்த்தாள். ஏதோ ஒரு பேரின் கீழே ‘டாக்டர் சிவசங்கர மேனன் கிளினிக்’ என்று எழுதி வார்டு எண்ணும் தெளிவாகப் போட்டிருந்தது.

அதை அந்த வார்டில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவதற்காகப் போன கொச்சம் மணி அங்கேதான் அந்த அதிசயத்தைச் சந்தித்தாள். வார்டுக்குள் நுழைந்தவுடன் நீங்கள்தான் இந்த விலாசத்துக்கு உரியவரா என்று கேட்பதற்காகப் பேரைப் படித்தவள், ‘சுதாகரன் நாயர்’ என்று படித்துவிட்டு மனத்தில் சந்தோஷமானதொரு சந்தேகத்தோடு எதிரே கட்டிலில் படுத்திருந்த இளைஞரின் முகத்தைப் பார்த்தாள்.

அந்த இளைஞர் புன்முறுவலோடு கை நீட்டி அவள் கொடுத்த பத்திரிகைப் பிரதியை வாங்கிக் கொண்டார். அதைக் கொடுத்த பின்பும் நகராமல் கொச்சம்மணி அங்கேயே நின்றாள்.தன் மனத்திலிருப்பதை எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை அவளுக்கு. அந்த இளைஞரின் முகத்தைப் பார்ப்பதற்கும் அவளுக்கு நாணமாக இருந்தது.

“இந்தப்பத்திரிகையின் சென்ற இதழில் வந்த ‘பாரதப் புழையின் கரையிலே’ என்ற கவிதையைப் படித்தீர்களோ?” என்று வேறு விதமாகத் தன் கேள்வியை அவரிடம் கேட்டாள் கொச்சம்மணி.

அவளுடைய இந்தக் கேள்வியைச் செவியுற்றவுடன் சாய்ந்தாற் போல் படுத்திருந்த அந்த இளைஞர் நிமிர்ந்து உட்கார்ந்தார். பதில் ஒன்றும் கூறாமல் புன்முறுவல் பூத்தபின், “ஏன், அந்தக் கவிதையில் ஏதாவது விசேஷம் உண்டோ?” என்று அவளைக் கேட்டார். கொச்சம்மணிக்கு நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு பதில் கூறினாள்.“அந்தக் கவிதையே ஒரு விசேஷம்தான்! அதைப் படித்த விநாடிகளை நான் வாழ்த்தினேன். அதைப் படைத்த கைகளில் மணம் நிறைந்த பூக்களை அள்ளிச்சொரிய வேண்டுமென்று ஆசைப்பட்டேன்” என்று கொச்சம்மணி கூறியவுடனே படுக்கையில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞர் கையிலிருந்த பத்திரிகையைக் கீழே வைத்துவிட்டு ரோஜாப் பூவின் உள்ளிதழ்போல் வெண் சிவப்பு நிறமான தன் உள்ளங்கைகள் இரண்டையும் திடீரென்று அவளுக்கு முன்னால் நீட்டி, “பூக்களைச் சொரியுங்கள்” என்று கூறிச் சிரித்தார்.

அந்தக் கணத்தில் கொச்சம்மணியின் கண்களிலே பக்தி மலர்ந்தது. நெஞ்சிலே பாரதப் புழையின் நீர் பெருகி நனைந்தது. அவரிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை அவளுக்கு.

“எங்கள் டாக்டரின் மகள் அந்தக் கவிதையைப் படித்துவிட்டு உங்களுக்கு நோபெல் பரிசு தர வேண்டும் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறாள்” என்று மீண்டும் புகழ்மாலையில் இறங்கினாள்.