பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————

முதல் தொகுதி / சத்தியத்தின் பிரதிநிதியாய் 525


“உங்கள் டாக்டரைப் பார்த்தால் கவிதைகளை இரசிக்கிறவராகத் தெரியவில்லையே? என்னுடைய நோக்கில் பார்த்தால் உலகத்தில் உள்ள டாக்டர்கள் எல்லாரும்தான் நிஜமான நோயாளிகள். சாதாரண மனிதர்களுக்கு இருக்கிற ஆர்வங்களையும் சுவையுணர்வுகளையும் டாக்டர்கள் இழந்து போயிருக்கிறார்கள். வாயினால் பேசி மற்றவர்களுடைய நாடித்துடிப்பை உணர்வதற்குப்பதில் ஸ்டெதாஸ் கோப்பினாலேயே உணர்கிறவர்களுக்குக்கவி இதயமும் கத்தரிக்காய் விற்கிறவனுடைய இதயமும் ஒன்றாகத்தான் துடிக்கும். நல்ல வேளையாக உங்கள் டாக்டரின் மகளுக்காவது கவிதையை இரசிக்கும் இதயம் இருப்பதாக நீங்கள் சொல்வதைக் கேட்டு மகிழ்கிறேன். நீங்கள் ‘நான் இன்னார்தானா’ என்று கேட்டுத் தெரிந்து கொள்வதற்கே ஆர்வமாக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் டாக்டரோ நான்கு நாட்களுக்கு முன்பு நான் இங்கு வந்து ‘அட்மிட்’ ஆனபோது என்னைப் பற்றி நானாக இன்னாரென்று கூறியும் கூடப்பதிலுக்குப் புன் சிரிப்புக்கூடச் சிரிக்கவில்லை” என்று கொதிப்போடு பேசினார் அவர்.

“அது அவர் சுபாவம்! அவருடைய மனைவிக்கும், மகளுக்கும் நீங்கள் இங்கே அட்மிட் ஆகியிருப்பது தெரிந்தாலோ ஒரு திருவிழாக் கொண்டாட்டமே கொண்டாடி விடுவார்கள்” என்று உற்சாகமாகப் பதில் கூறினாள் கொச்சம்மணி.

“நீங்கள் இங்கு நர்ஸாக இருக்கிறீர்களோ?”

சுதாகரனின் இந்தக் கேள்விக்கு மறுமொழியாகத் தன் சரித்திரத்தையே சுருக்கமாகச் சொல்லி முடித்தாள் கொச்சம்மணி.

“இன்றைய நிலையில் உங்களைப் போன்று கஷ்டப்படுகிறவர்கள்தான் தேசப் பற்றையும், மொழிப் பற்றையும், தேசீய உணர்ச்சிகளையும் இழந்துவிடாமல் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார் சுதாகரன்.

“நீங்கள் இப்படி ஏங்கிப்போய்ப் பேசக்கூடாது. இங்கே தங்கியிருக்கிற வரை உங்களுக்கு வேண்டிய செளகரியங்களை நான் செய்து கொடுப்பேன். ஒவ்வோர் இந்தியனுடைய உள்ளத்தையும் நினைவுகளையும் கங்கை மானசீகமாக நனைத்துக் கொண்டிருப்பதைப் போலத் தன் கரையில் பிறந்த ஒவ்வொரு மலையாளியின் மனத்தையும் பாரதப்புழை நனைத்துக் கொண்டிருப்பதாக நீங்கள் எழுதியிருக்கிறீர்களே! என் மனத்தை ஒவ்வொரு விநாடியும் நான் பிறந்த இடத்து நதிக்கரை நீர் அலை அலையாக நனைத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு உதவி செய்வதன் மூலம் நான் பெருமைப்படமுடியும்” என்று கொச்சம்மணி கூறியபோது சுதாகரன் அவளைப் பார்த்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினார். ‘அட்மிட்’ அவள் உற்சாகம் தாங்க முடியாத மனத்தோடு தபால்களை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனாள். வாரப் பத்திரிகைக்காகக் காத்துக் கொண்டிருந்த டாக்டரின் மனைவியிடம் பத்திரிகையையும் சுதாகரன் கீழே தங்கள் ஆசுபத்திரியில் வந்து ‘அட்மிட்’ ஆகியிருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியையும் சேர்த்துத் தந்தாள் கொச்சம்மணி. ஆனால் அந்த முதிய அம்மாள் சுதாகரனின் எழுத்துக்களை விரும்பிப் படித்த அளவு இந்தச் செய்தியைக் கேட்டு அதிக ஆர்வம் காண்பிக்கவில்லை.