பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

526நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“அப்படியா? சாயங்காலம் வசந்தா கல்லூரியிலிருந்து வந்ததும் அவளிடம் சொல்லு மிகவும் மகிழ்ச்சி அடைவாள்” என்று சொல்லிவிட்டுப் பத்திரிகை படிப்பதில் மூழ்கிவிட்டாள் சிவசங்கரனின் மனைவி கொச்சம்மணியின் ஆர்வம் இந்த அலட்சியத்தில் பேர்பாதி அடங்கிப் போய்விட்டது. ஏதோ பெரிய திருவிழாக் கொண்டாட வேண்டிய நிகழ்ச்சி நடந்திருப்பது போலவும் அதைப் பொருட்படுத்தாமல் எல்லாரும் வேண்டுமென்றே திட்டமிட்டுக் கொண்டு அலட்சியம் செய்வது போலவும் கொச்சம்மணிக்கு அப்போது தோன்றியது. சாயங்காலம் வசந்தா வந்ததும் அவளிடம் ஓடிப்போய் இந்தச் செய்தியைச் சொன்னாள். அவள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. இந்தச் செய்தியைக் கேட்டதும் வசந்தா மகிழ்ச்சிக் கூத்தாடினாள்.

“இதோ வருகிறேன்! இரண்டு பேருமாகக் கீழே போய் அவரைப் பார்க்கலாமடீ’ என்று கூறிவிட்டு அலங்காரம் செய்து கொள்ளப் புகுந்த வசந்தா முக்கால் மணி நேரத்துக்குப் பின்புதான் வெளியே வந்தாள். ஏதோ கிளியோ பாத்ரா ஸீஸரை வெற்றி கொள்ளப் புறப்பட்டாற்போல அழகுத் தேவதையாகப் புறப்பட்டிருந்தாள் வசந்தா. இதன் காரணமும் கொச்சம்மணிக்குப் புரியவில்லை. ‘இந்தப் பெண் சுதாகரனைத் தான் பார்க்கவேண்டுமென்று வருகிறாளா, அல்லது சுதாகரன் தன்னைப் பார்க்க வேண்டுமென்று வருகிறாளா?’ என்று புரியாமல் மருண்டாள் அவள். மனம் எதற்காகவோ கஷ்டப்பட்டது அவளுக்கு. வசந்தா சுதாகரனுடைய அறைக்குள் நுழைந்ததும் தான் யாரென்று அறிமுகம் செய்து கொள்ளாமலே அவரது கட்டிலின் விளிம்பை ஒட்டினாற்போல் ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டுவிட்டாள். கதவோரமாகப் பணிவோடு தயங்கி நின்ற கொச்சம்மணிக்கு இதுவும் பிடிக்கவில்லை. “எங்கள் டாக்டரின் மகள்” என்று கொச்சம்மணி அவருக்கு வசந்தாவை அறிமுகம் செய்து வைத்தாள். வசந்தா வணங்கியதற்குப் பதிலாகச் சுதாகரன் கைகூப்பினான். அடுத்த விநாடி பாதி ஆங்கிலமும் பாதி மலையாளமும் கலந்து வசந்தா சுதாகரனிடம் கேட்கத் தொடங்கிய கேள்விகளைக் கண்டு கொச்சம்மணி தன் மனத்தில் மிகவும் வேதனையடைந்தாள்.

“நீங்கள் ‘கோல்ட்ஸ்மித்’ ஏதாவது படித்திருக்கிறீர்களா?”

“இல்லை” சுதாகரனின் பதில் இது.

“பைரன்... ஷெல்லி...?”

“இல்லை”

“கலில்ஜிப்ரான்?”

“இல்லை.”

“நீங்கள் விரும்பித் தோய்ந்து படித்த புத்தகம்?”

“வாழ்க்கை! பாரதப்புழையின் கரையில் சிறிதும் பெரிதுமாயுள்ள மலையாளத்து ஊர்களின் வறுமையும், வளமும், ஏக்கமும், இன்பமும் எனக்கு மனப்பாடம்.”