பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

528நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

பிரித்துப் புரிந்து கொள்கிற வரை வேதனைதான்! உலகத்தில் முதல் காவியமும் முதல் கவிஞனும் பிறந்ததிலிருந்து இந்த வேதனை உண்டு.”

“நீங்கள் அப்படி எந்தப் புகழ்ச்சியிலாவது சத்தியத்தின் குரலைக் கேட்டிருக்கிறீர்களோ?”

“நேற்று வரை இல்லை! இன்று காலையில் இந்த வார்டு தேடி வந்து ஒரு வேலைக்காரப் பெண் நான் இன்னாரென விசாரித்துத் தெரிந்து கொண்டு கண்களில் பயபக்தி மலரப் புகழ்வதற்குச் சொற்களே கிடைக்காமல் என் எதிரே நின்றாள். அப்போது அவளுடைய கண்களில் மட்டும் சத்தியத்தைப் பார்த்தேன். இப்போதும் என் எதிரே அதே கண்களைப் பார்க்கிறேன்” என்று சுதாகரன் புன்னகையோடு கூறியபோது கொச்சம்மணி நாணித் தலை குனிந்தாள்.

அந்தக் கணத்தில் - ஒரே ஒரு கணத்தில் பாரதப்புழை தான் ஓடிக்கொண்டிருந்த இடத்திலிருந்து நானூறு மைல்களைக் கடந்து வந்து அவள் மனத்தில் மட்டுமே பிரவாகமாகப் பெருகி ஓடியது. அது ஒரு விசித்திரமான அநுபவம். அதைச் சொல்லுவதற்கு வார்த்தைகளே இல்லை. அவள் அந்தக் கவிஞனை நோக்கித் தன் கைகளைக் கூப்பி வணங்கினாள். அவருடைய எதிரே நின்று வணங்குவதற்குக் கூடப் பயமாகவும் நாணமாகவும் இருந்தது அவளுக்கு கொச்சம்மணிக்கு மனத்தத்துவம் தெரியாது. அவ்வளவு பெரிய வார்த்தையை அவள் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால் அவளுடைய நாவுக்கு எப்படியோ ஒரு பொது நாகரிகம் தெரிந்திருந்தது. அதை அவள் எங்கும் யாரிடமும் தேடிப்போய்க் கற்றதில்லை. இரத்தத்தைப் போல் உடம்பிலேயே ஓடிக்கொண்டிருந்தது அந்த நாகரிகம். எது புத்திசாலித்தனம், எது அசட்டுத்தனம் என்று பிரித்துப் படிக்காமல் எது புத்திசாலித்தனமோ அப்படியே நடந்துகொண்டு விடுகிற பேதைகளையும்.அப்பாவிகளையும் சுதாகரனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கள் அவன் கவிக்கு விஷயங்கள்.

“ஒவ்வொரு இந்தியனுடைய உள்ளத்தையும் நினைவுகளையும் கங்கை மானசீகமாக நனைத்துக் கொண்டிருப்பதைப் போலத் தன் கரையில் பிறந்த ஒவ்வொரு மலையாளியின் மனத்தையும், நினைவுகளையும் அவன் எங்கிருந்தாலும் பாரதப்புழை நனைத்துக் கொண்டிருக்கிறது” என்ற வரிகளை அவள் மட்டும் கேட்க முடிந்த மெல்லிய குரலில் அவளுக்காகவே பாடிக் காட்டினான் சுதாகரன். அந்தக் குரல் நலிந்திருந்தாலும் சத்தியத்தின் பிரதிநிதியாய் ஒலித்தது.

(கல்கி, 11.3.1962)