பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71. ஊமைப் பேச்சு

ப்போதுதான் விடிந்திருந்தது. முதல்நாள் இரவெல்லாம் மழை பெய்து முடிந்த ஈரமும், குளுமையுமாக இந்த உலகம் மிகவும் அழகாயிருந்தது. பன்னீ ர் மரத்து இலைகளிலிருந்து முத்து உதிர்வது போல நீர்த்துளிகள் இவ்வளவு நேரத்துக்கொரு முறைதான் கீழே உதிர்வது என்று திட்டமிட்டுக் காலப் பிரமாணம் தவறாமல் வாசிக்கப்படும் தாளத்தைப் போல வீழ்ந்து கொண்டிருந்தன. எப்படி எப்படி அழகாயிருக்கிறது என்று பிரித்துப் பிரித்துச் சொல்ல முடியாதவாறு அப்படி அப்படி இருப்பதே அழகுகளாய் அந்தக் காலை வேளையில் இந்த உலகம் ரொம்பவும் அனுபவிக்கத்தக்கதாயிருந்தது. சுந்தரராஜன் ‘அவுட்ஹவுஸி’ன் மாடியிலிருந்து பங்களாவின் தோட்டத்திற்குள் இறங்கிய போது சிறிது நேரம் சிந்தனை செய்து ஏதாவது ஒருபுதிய கவிதை எழுத வேண்டுமென்ற ஆர்வத்தோடு வந்திருந்தான். ஆனால் அப்போது அவன் கண் விழித்துப் பார்த்த உலகமே தயாராக யாரோ எழுதி வைத்திருந்த கவிதையைப் போலக் காண்பவர்களை மயக்கிக் கொண்டிருந்தது. ஒரு கவிதையைப் பார்த்து இன்னொரு கவிஞன் அப்படிகவிதை இயற்றினால் ‘ஈயடிச்சான் காப்பி’ என்றல்லவா கேவலமாகச் சொல்ல வேண்டியிருக்கும்? இயற்கையில் மயக்கும் தன்மை வாய்ந்தவையாயிருக்கும் மழை, சூரியன், சந்திரன் எல்லாமே தயாராக எழுதி வைக்கப்பட்டிருக்கும் கவிதைகள்தாம். அவற்றைப் பார்த்துப் புனைய முடியாமல் நாம் தவிக்கும் தவிப்புத்தான் நமது ஆற்றாமை என்ற துணுக்கமான சிந்தனைகள் முந்தும் மனத்தோடு சுந்தரராஜன் தோட்டத்தில் பிரவேசிக்கவும், நீதிபதி தண்டபாணியின் மகள் எண்ணெய் நீராடி அவிழ்ந்து, நெகிழ்ந்து, தொங்கும் கூந்தலோடு பூக்களைப் பறிப்பதற்காக எதிரே வரவும் சரியாயிருந்தது. அந்தக் கோலத்தில் அவள் கவர்ச்சி நிறைந்து தோன்றினாள். சுந்தரராஜனுக்கு அவளைக் கண் நிறையப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருந்தது. அதேசமயத்தில் அப்படிப் பார்த்தால் யார் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று வெட்கமாகவும், பயமாகவும் வேறு இருந்தது. மழை மணக்கும் அந்த ஈர வைகறையில் பூக்குடலையோடு ஒரு பெண் வளைகளும், மெட்டியும் ஒலிக்கும்படி துவள துவள நடந்து வந்தால் எத்தனை அழகாயிருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்துதான் பாருங்களேன்! -

அழகாயிருப்பதைப் புரிந்து அங்கீகரித்துக் கொண்டு தைரியமாக நிமிர்ந்து பார்க்கவும்.துணிச்சல் வேண்டும்.சுந்தரராஜன் இளம் பருவத்துக் கவி. ஆனால் அப்படி ஒன்றும் பெரிய தைரியசாலி இல்லை.

அவன் அங்கு வந்து தங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அவனுடைய சூரியன் அந்தப் பெண்ணின் முகத்திலிருந்துதான் உதிக்கிறது. ஆனால் ஒரு நாளாவது அவன்