பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

————————————————————————

அந்த செளந்தரியம் உதயமாகும் போது தைரியமாக நிமிர்ந்து பார்த்ததே இல்லை. தைரியமில்லாத ஆண்பிள்ளை கவியாயிருந்தாலும் அவனை மன்னிப்பதற்கில்லை நான்.

கவி எழுதுவதும், அதனால் தான் ஒரு கவியாயிருப்பதாக நினைத்துக் கொள்வதும் சுந்தரராஜனுக்குப் பொழுதுபோக்கு. நிஜமான உத்தியோகம் என்னவோ, நீதிபதி தண்டபாணிக்கு அந்தரங்கக் காரியதரிசி.

ஜஸ்டிஸ் தண்டபாணி அவர்களிடம் அடிக்கடி முன் கோபப்படுவதைத் தவிர வேறு எந்தவிதமான அந்தரங்கமும் இல்லையென்றாலும் அவருடைய கெளரவத்துக்கும் செல்வாக்கிற்கும் ஒர் அந்தரங்கக் காரியதரிசி தேவையாயிருந்தது மட்டும் உண்மைதான். ‘இந்த உலகத்தில் கவியெழுதியே பிழைப்பு நடத்திவிட முடியாது’ என்பது உறுதியாகவும், அனுபவ பூர்வமாகவும் தெரிந்துவிட்டபின் பத்திரிகையில் விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து நீதிபதியின் காரியதரிசியாக வந்து சேர்ந்தான் சுந்தரராஜன். நீதிபதியின் வறட்சியான காரியங்களை அவரிடம் சம்பளம் வாங்குவதற்குக் கவியெழுதுகிற சம்பளமில்லாத காரியத்தையும் சேர்த்துச் செய்து கொண்டிருந்தான் அவன்.

இப்பொழுதும் அவன் கவியெழுத வேண்டுமென்று தினசரி விடிந்ததும் தூண்டுகிற முதல் ஞாபகத்தைப் போல் நீதிபதி தண்டபாணியின் மகள் பூக்குடலையோடு அவன் கண்களில் தெரிந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குத்தான் ஏதேனும் கவியெழுதினால் தேவலை என்பதுபோலத் தோன்றும். அவனுக்குக் கவியெழுதும் ஞாபகம் வரும்போதெல்லாம் அவளைப் பார்க்க வேண்டுமென்றும் தோன்றும். ஆனால் தேடிக் கொண்டு போய் அவளை நேருக்கு நேர் பார்ப்பதற்கு மட்டும் துணிச்சல் இருக்காது. விடிந்ததும் விடியாததுமாக அவளே பூக்குடலையோடு தேடிக் கொண்டு வரும்போது நேருக்கு நேர் ஏறெடுத்துப் பார்க்கத் துணிவின்றி ஓரக்கண்ணால் ஏனோதானோ என்று பார்த்துத் திருப்திப் பட்டுக் கொள்வான். இந்தக் குறைந்த திருப்தியில் ஏதோ ஒரு மகிழ்ச்சி இருந்தது. சில அனுபவங்கள் முற்றி நிறைந்துவிடாமல் அரைகுறையாகவே இருக்கிறவரை அழகாயிருக்கும். அந்த அரைகுறைத் தன்மையிலேயே அவை முழுத் திருப்தியை அளித்துக் கொண்டிருக்கும். சுந்தரராஜனுடைய அனுபவமும் அப்படித்தான் இருந்தது. குறைவுள்ளதாயிருந்து கொண்டே நிறைவுள்ளதாயுமிருந்தது அந்த அனுபவம். தர்க்கரீதியாக இரண்டு நேர்மாறான குண்ங்கள் ஒரு நிலையில் சேர்ந்து தங்குவது சாத்தியமில்லையே என்று யாராவது விபரம் தெரிந்தவர்கள் நினைக்கலாம். நன்றாக நிமிர்ந்து பார்க்க முடியாமல் குறைவாகப் பார்த்ததனால் தான் சுந்தரராஜனுக்கு நிறைவான மகிழ்ச்சி இருந்தது என்பதில் மட்டும் சந்தேகமில்லை. அந்தப் பார்வையில் அவன் கண்கள் நெருங்கி அடைய முடியாமல் ஏதோ விடுபட்டுப் போய் மீதமிருந்தது. அப்படி ஏதோ விடுபட்டுப்போய் மீதமிருந்ததனால்தான் அவன் மனத்தினுள் குறுகுறுப்பானதொரு மகிழ்ச்சி அந்த மீதத்தைத் தேடி நிறைந்து கொண்டிருந்தது.