பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

546 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

————————————————————————————


உள்ளூர்க் கல்லூரி மாணவர்களும், வெளியூர்க் கல்லூரி மாணவர்களும், சகல விதத்திலும் தங்கள் புத்தியைக் ‘கள்ளப்பிரான் காட்டிய வழி’யில் செலுத்திப் பொருளாதாரத் தேர்வில் வெற்றி பெற முயன்று கொண்டிருந்தார்கள். பொருளாதாரப் பரீட்சையைப் பொறுத்த மட்டிலே கள்ளப்பிரானுடைய கருணையை எல்லாரும் வியந்தார்கள். ‘நோட்ஸ்’ முடிவில் ஐயாயிரம் பிரதிகள் விற்பனையாகிப் பிறகு போதாமற் போய் மீண்டும் ஐயாயிரம் அச்சிட்டு, அதுவும் பற்றாமல் மூன்றாவது முறையாக மேலும் ஐயாயிரம் அச்சிட்டு விற்பனையாகித் தீர்ந்து போய்விட்டது.

தாம் வாய் விட்டுக் கேட்காமல் கம்பெனிக்காரர்களாகவே ஏதேனும் பணம் கொண்டு வந்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார் கள்ளப்பிரான்பிள்ளை. நோட்ஸைப் புகழ்ந்து கிடைத்துக் கொண்டிருந்த கடிதங்கள் மட்டும் நாள் தவறாமல் புத்தகக் கம்பெனியிலிருந்து ஒழுங்காக ரீ டைரெக்ட் ஆகி வந்து கொண்டிருந்தன. அந்தத் ‘தபால் புகழ்’ ஏற்படுத்தியிருந்த பொய்க் கெளரவத்தில், ‘பணத்தைப் பற்றிப் பேசுவதே அகெளரவம்’ என்று எண்ணிக் கள்ளப்பிரான் பிள்ளை கொஞ்ச நாட்களுக்குப் பேசாமல் கெளரவமாகக் கல்லூரிக்குப் போய் வந்து கொண்டிருந்தார். எங்கே பார்த்தாலும் பேராசிரியர் கள்ளப்பிரான் பிள்ளையைப் பற்றியே பேச்சாக இருக்கும் போது, பணத்தைப் பற்றி யாராவது கவலைப்படுவார்களா? பொருளாதாரப் பேராசிரியர் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பின் வேறு யார் கவலைப்படுவது என்று உங்களுக்குச் சந்தேகமாக இருக்கலாம். ஆனால் கள்ளப்பிரான் பிள்ளையின் தத்துவமே வேறு. அவர் எதைப் பற்றியுமே கவலைப்படுவதில்லை. அதை நினைத்துத் தான் அவர் குடும்பத்தார் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்களே, போதாதா அது?

“என்ன, நோட்ஸ் எழுதிக் கொடுத்தீர்களே! ஏதாவது பணத்துக்கு வழி உண்டோ, இல்லையோ?” என்று ஒரு நாள் சாயங்காலம் வீட்டுச் செலவுக்குக் கஷ்டமாக இருந்ததைப் பற்றிப் பிரஸ்தாபித்த சூட்டோடு விசாரித்தாள் பூரீமதி கள்ளப்பிரான் பிள்ளை. அப்போதுதான் முதல் தடவையாக, புத்தகக் கம்பெனிக்காரனிடம் பணம் கேட்டால் என்ன என்பதைப் பற்றி அவர் யோசிக்கத் தொடங்கினார். சட்டையை மாட்டிக் கொண்டு புத்தகக் கம்பெனிக்காரனைத் தேடிப் புறப்படுவதற்கு இறங்கினவர், நடந்துபோய் அந்தப் புத்தகக் கம்பெனிக்குள் நுழைவது கெளரவம் அல்ல என்று எண்ணியவராய்த் தெருவில் போய்க் கொண்டிருந்த சைக்கிள் ரிக்‌ஷா ஒன்றைக் கைதட்டிக் கூப்பிட்டார். அதில் ஏறிக் கொண்டு அவர் ‘நோட்ஸ்’ வெளியிட்டிருந்த புத்தகக் கம்பெனிக்குப் புறப்பட்டபோது மாலை ஆறு மணி இருக்கும். போய்க் கொண்டிருக்கும் போது எத்தனை எத்தனையோ இனிய கற்பனைகள்! ‘நோட்ஸ்’ வெளிவந்த பிறகு இப்போதுதான் முதல் முதலாக அந்தக் கடைக்குப் போகிறோம். கம்பெனிக்காரனுக்கு நம்மை அங்கே பார்த்ததும் தலைகால் புரியாது. ஓடியோடி விழுந்து விழுந்து உபசரிக்கப்போகிறான். கடையையும், அச்சிடும் இடத்தையும் சுற்றிக் காண்பித்து அங்கே வேலை செய்பவர்களை எல்லாம் கூப்பிட்டு அறிமுகப்படுத்தப்போகிறான். சும்மாவா பின்னே? கள்ளபிரான்ஸ் கைட் டு எகனாமிக்ஸின் ஆசிரியரே விஜயம் செய்கிறார் என்றால் கேட்கவா வேண்டும்?