பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————————————

முதல் தொகுதி / வெறும் புகழ்547


பேராசிரியருக்கு வரவேற்பு மிகவும் தடபுடலாகத்தான் இருந்தது. யாரோ நாலைந்து இளம் பெண்கள் நாற்காலிகளில் உட்கார்ந்து சிரிப்பும் கும்மாளமுமாகப் புத்தகக் கம்பெனிக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் “ஸார் வரணும் வரணும் இவங்க எல்லாம் உங்க பக்தர்கள். உங்க எகனாமிக்ஸ் நோட்ஸைப் படிச்சுட்டு நம்ம கடையைத் தேடி வந்திருக்காங்க. ஸாரைக் கொண்டே இங்கிலீஷூக்கும் ஒரு நோட்ஸ் போட்டா என்னன்னு கேக்கறாங்க” என்று புத்தகக் கம்பெனிக்காரன் அவர்களை அறிமுகப்படுத்தியபோது பேராசிரியர் கள்ளப்பிரான் பிள்ளை மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேஜைமேல் வைத்துவிட்டுத் தலையைக் காதோரமாகச் சொறிந்தார். அந்தப் பெண்கள் குலுக்கலும் மினுக்கலுமாக எழுந்து நின்று, ‘நமஸ்தே புரெபஸர் ஸார்’ என்றபோது மறுபடியும் தலையைச் சொறிந்தார் பேராசிரியர். கடைப் பையன் காபி சிற்றுண்டிவாங்கிவந்தான்.“இதெல்லாம் எதுக்கு? வீட்டிலேயே காபி, டிபன் எல்லாம் முடிச்சாச்சே!” என்று பிகுபண்ணிக்கொண்டார் கள்ளப்பிரான் பிள்ளை.

கடைக்காரன் விடுவானா? “நீங்க அப்பிடிச் சொல்லவே கூடாது. முதல் முதலா இப்பத்தான் நம்ம கடைப்படி ஏறி வந்திருக்கீங்க” என்று அவன் உபசாரம் செய்து குழைந்தான். “எடுத்துக்குங்க ஸார்” என்று தன் அழகான பல்வரிசை தெரியக் கிண்கிணிச் சிரிப்போடு வந்திருந்த பெண்களில் ஒருத்தியே உபசரித்தபோது பேராசிரியருக்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது. மூன்றாவது தடவையாக மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுத் தலையைச் சொறிந்தார். பின்பு சிற்றுண்டி சாப்பிடத் தொடங்கினார். மானசீகமாக அவரையே சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தான் புத்தகக் கம்பெனிக்காரன். இந்த உலகத்தில் அப்பாவிகளுடைய பலவீனங்கள் என்ன என்ன என்பது அவனுக்கு அத்துப்படி.

கள்ளப்பிரான் பிள்ளையும் காத்துக் காத்துப் பார்த்தார். அந்தப் பெண்கள் எல்லாரும் எழுந்து போனபின் தனிமையில் கம்பெனிக்காரனிடம் பண விஷயத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்கலாம் என்று நாகரிகமாக இருந்தார். தம்மைப் புகழ்கிற நாலு பேருக்கு முன்னே தமக்குத் தற்சமயம் பணத் தேவை இருக்கிறது என்று சொல்வதற்குக் கூசினார். ‘அவர் ஏதோ சொல்லிக் கேட்பதற்குக் கூசிக் கொண்டிருக்கிறார்’ என்பது கம்பெனிக்காரனுக்கும் புரிந்துவிட்டது. அப்படிப் புரிந்ததனால்தான் அவர் புறப்படுகிற வரையில் தன்னைச் சுற்றி யாராவது இருக்கும்படி செய்து கொண்டிருந்தான். கடையே அமைதியாக மாறித் தாம் மட்டும் தனியாக இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டாலன்றி அவர் வாய்விட்டுப் பணம் கேட்கக் கூசுவார் என்பது அவனுக்குத் தெரிளவாய்த் தெரிந்துபோய்விட்டது.அப்பாவிகள் என்ன பேச இருக்கிறார்கள் என்பதைக் கண்டு பிடிப்பது புத்திசாலிகளுக்குப் பெரிய காரியம் அல்லவே! ஏற்கனவே உட்கார்ந்து கொண்டிருந்த நாலு பெண்கள் போதாதென்று இளைஞர்களில் சிலர் வேறு கடைக்குள் நுழைந்து உட்கார்ந்துவிட்டார்கள். பேராசிரியர் கள்ளப்பிரான் பிள்ளை அதிகக் கூச்சம் அடைந்து பணத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமலே புறப்பட்டு விட்டார்.