பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73. தர்மோபதேசம்

ர்மத்தைப் பற்றி உபதேசம் பண்ணுவதும், எழுதுவதும் ஒரு தொழில் என்று நீங்கள் நிச்சயமாக ஒப்புக் கொள்ள மாட்டீர்கள்; நானும் ஒப்புக் கொள்வதற்கில்லை. ஏன், இந்த உலகத்தில் எவருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ முகுந்தராம தீட்சிதர் அவர்களுக்குத் தொழில் தர்மோபதேசம்தான். தர்மத்தைப் பற்றி நினைப்பதும், பேசுவதும், ஒரு தொழில் என்று நிரூபித்து அதன் மூலம் ஆயிரம் ஆயிரமாகப் பணம் புரட்டிக் கொண்டிருக்கிறவர் அவர். அதோ கிருஷ்ண நகர் கண்டோன்மென்ட் மைதானத்தில் பக்த சிரோன்மணிகள் பல்லாயிரம் பேருக்கு ஸ்ரீமத் பாகவதத்தை அவர் பிரவசனம் செய்து கொண்டிருக்கிற கம்பீரத்தைக் கேளுங்கள். மாதிரிக்குக் கொஞ்சமாவது கேளுங்கள். ஒரு சுவாரஸ்யமான கட்டம் வருகிறது. “கோபிகா ஸ்திரீகள் அத்தனை பேரும் சுவர்ண விக்ரகம் போல பிறந்த மேனியா நதி தீரத்திலே நிக்றா... அவளோடவஸ்த்ரங்களைக் காணலே. நதிக்கரையிலே எல்லா எடத்திலேயும் தேடிப் பார்த்தாச்சு. ஐயோ. மானமில்லாம, லெச்சையில்லாம. இப்படி நிக்கறோமேன்னு. அவாளோட மனசெல்லாம் தவிக்கிறது. அப்போ கரைமேலே புன்னை மரத்துலேர்ந்து கலகலன்னு சிரிக்கறார் பகவான். கோபிகா ஸ்திரீகள்ளாம் ரொம்பக் கூச்சத்தோட தங்களோட பருத்த ஸ்தன்ய பாரங்களை ரெண்டு கைகளாலேயும் மூடிக் கொண்டு மேலே நிமிர்ந்து பகவானைப் பார்க்கறா.” மாதிரிக்கு இத்தனை போதும் பிரம்மஸ்ரீ தீட்சிதருடைய கதையில் ‘ஸெக்ஸ்’அம்சமும் உண்டு. ‘செக்ஸ்’ அம்சமும், விளம்பரங்களும் ரொம்ப விற்பனையாகிற பத்திரிகைக்கு எத்தனை அத்தியாவசியமோ அத்தனை அத்தியாவசியமாகத் தீட்சிதரின் கதைக்கும் தேவைப்பட்ட விஷயங்களாயிருந்தன. புராணமானால் என்ன? இதிகாசமானால் என்ன? எந்த இடத்தில், எதைக் கலந்து எப்படிப் பிரவசனம் செய்ய வேண்டுமென்பது தீட்சிதருக்கு நன்றாகத் தெரியும். பத்திரிகைகளில் கால் பக்கம், அரைப் பக்கம், ஒரு கலர், இரண்டு கலர், விளம்பரங்கள் எல்லாம் இருக்கிற மாதிரி தீட்சிதருடைய கதையில் கூட விளம்பரங்கள் உண்டு. தீட்சிதருடைய உபன்யாச உபதேசங்களில் நடுநடுவே பெரிய மனிதர்கள், வசதியுள்ளவர்கள், எல்லாரையும் பற்றிய புகழுரைகள் இருக்கும்.நிறையவே இருக்கும்.

புனிதமான இராமாயணக் கதையில் ஸ்ரீமத் வால்மீகி பகவான் தசரத சக்ரவர்த்தியின் வள்ளன்மையைப் பற்றிச் சொல்லியிருக்கிற இடம் வரும் போது, எதிரே உட்கார்ந்து உபன்யாசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் மைலாப்பூர்ப் பிரமுகரையோ, நீதிபதியையோ, மந்திரியையோ, தொழிலதிபரையோ தூக்கி வைத்துப் புகழ ஆரம்பித்து விடுவார் அவர்.