பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

554நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

கான்ஸ்டபிளைக் கூப்பிடத் தொடங்கி விட்டார்கள். தீட்சிதருக்கு எதுவும் ஆகிவிடலாகாதே என்று அவர்களுக்குப் பயம்.

“போலீஸுக்கு அவசியம் ஒன்றுமில்லை! ஆஸ்திகத்தைக் காக்க ஆண்டவனை அழையுங்கள்! போலீஸை அழைக்காதீர்கள். நீங்கள் அழைத்தால் ஆண்டவன் வரமாட்டான். போலீஸ்காரன்தான் வருவான்” என்று சொல்லிவிட்டு அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்றான் முத்துசாமி.

இரவு பதினொரு மணிக்குத் தீட்சிதர் பெல்லி பெத்தசாமி செட்டி பட்டுக்கடை வாசலில் பெரிய டாக்ஸி ஒன்றில் போய் இறங்கியதையும் பட்டாபிஷேகத்தில் கிடைத்த புது வேஷ்டி புடவைகளை அப்படியே மடிப்புக் கலையாமல் இரண்டு இரண்டு ரூபாய் குறைத்து அந்தக் கடையில் (ஒரு கதவை மட்டும் இரகசியமாய்த் திறந்து) கொடுத்துப் பேரம் முடித்துத் திரும்பியதையும், முத்துசாமி தன் கண்களாலேயே பார்த்தான். மனம் நொந்து பெருமூச்சு விட்டான். மனிதனுடைய கஷ்டநஷ்டங்களுக்கு நெகிழாமல், கோவிலுக்கும், சாஸ்திரங்களுக்கும் மட்டுமே நெகிழ்கிற ஆஸ்திகத்தினால் தெய்வமே திருப்தியடையாது என்பதை இந்த நாட்டிலுள்ள பாமரர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? அப்படிப் புரிய வைக்கிறவரை தர்மத்தை உணரவும், கடைப் பிடிக்கவும் தவறி வெறும் உபதேசம் செய்கிறவர்கள் மட்டும்தான் ஆஸ்திகர்களாகப் புகழப்படுவார்கள். என்னைப்போல் தர்மோபதேசத்தைவிடத் தர்மகர்த்தாவாக இருப்பது மேல் என்று கருதி உணர்ந்து செயல்பட்டு அதற்காகப் போராடுகிறவர்கள் நாஸ்திகர்களாக இகழப்படுவார்கள். ஆனாலும் கவலை இல்லை! நான்தான் நிஜமான ஆஸ்திகன் என்ற பெருமிதம் என் மனச்சாட்சிக்கு உண்டு. ‘அது போதுமே நான் பெருமைப்படுவதற்கு’ என்று எண்ணினான் முத்துசாமி மனிதனை மதிப்பதன் மூலமாகத் தெய்வத்தை மதிப்பவன் அவன். மனிதன்தான் நடமாடு கோவில் என்று நம்புகிறவன் அவன். மனித குலத்தைத் தவிக்க விட்டு வேறு எதையோ பக்தி செய்து கொண்டிருக்க அவனுக்குத் தெரியாது. மனிதனை இலட்சியமே செய்யாமல் வாழ அவனால் முடியாது. காரணம்? அவன் உபன்யாசம் செய்து சம்பாதிப்பதில்லை. உழைத்துச் சம்பாதிக்கிறான். தர்மோபதேசம் செய்ய அவனுக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம்.தெய்வத்தை மட்டும் மதிப்பதன் மூலம் மனித குலத்தை அலட்சியம் செய்ய அவனுக்குத் தெரியாது!

(தாமரை, அக்டோபர் , 1962)