பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

556நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“ஆமாம்! இரண்டு மூன்று நாட்களாயிற்று.”

“நேற்று இரவில் கூட வீட்டில் வந்து உங்களிடம் பேசிக் கொண்டிருந்தேனே;நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை?”

“நல்லது நடந்தால் நாலு பேரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்! இதில் சொல்ல என்ன இருக்கிறது? சொல்லிவிடுவதால் ஆகப்போவதுதான் என்ன?”

“அப்படி இருக்கக் கூடாது சார்! நல்லதோ கெட்டதோ, ஊரில் நாலு பேருக்குத் தெரிந்தால் தான் ஆதரவோ, அனுதாபமோ பெறமுடியும்.”

நீலகண்டன் இரண்டு கைகளையும் ஆட்டி முகத்தில் உறுதி ஒளிர ஆவேசத்தோடு பேசினார்.

மாதவன் மறுபடியும் உணர்ச்சியில்லாமல் பேருக்குச் சிரித்தான்.

“நீங்கள் பெரிய தவறு செய்துவிட்டீர்கள் சார்! உங்களுடைய இந்த அமைதியும், அடக்கமும் தருமனுக்கு இருந்தது போல் மகாபாரதத் தலைமுறையில் இருக்க வேண்டும். இந்தத் தலைமுறைக்குக் காலில் விழுந்து வணங்குகின்றவர்கள் தேவை இல்லை. கன்னத்தில் அறைகிறவர்கள் தாம் தேவை!”

“விடுங்கள் சார் பேச்சை!” மாதவன்தட்டிக் கழித்து விட்டு நீலகண்டனிடமிருந்து தன்னை மீட்டுக் கொண்டு வாசகசாலைக்குள் நுழைய முயன்றான். நீலகண்டன் விடவில்லை. மாதவனின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.

“வர வர ஊரில் அநியாயம் அதிகமாகிவிட்டது. நீங்கள் இதைச் சும்மா விட்டுவிடக் கூடாது. உங்கள் செல்வாக்கு உங்களுக்கே தெரியாது. நீங்கள் வாயசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?”

“ஒன்றுமே நடக்காது.” - இதைக் கூறிவிட்டு மாதவன் சிரித்த சிரிப்பில் குறும்புத்தனம் இருந்தது.

“சரி இருக்கட்டும்; நான் அப்புறம் வந்து உங்களிடம் பேசிக்கொள்கிறேன்” - என்று நீலகண்டன் ஒருமட்டில் அவனை விட்டுப் போய்ச் சேர்ந்தார்.

மாதவன் வாசகசாலைக்குள் நுழைந்தான். அங்கே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த அவனுடைய பழைய மாணவர்கள் மரியாதைக்காக எழுந்து நின்றனர். மாதவன் அவர்களை உட்கார்ந்து படிக்குமாறு கையமர்த்திவிட்டு அன்றைய செய்தித்தாள் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு படிப்பதற்காக ஒரு மூலையில் அமர்ந்தான்.

சுற்றிலும் ‘கசுமுசு’ வென்று எழுந்த பேச்சுக் குரல்கள் தன்னைப் பற்றியனவாகவே இருக்க வேண்டுமென்று அவனால் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. அந்த அனுமானத்திற்குச் செவிப்புலன் ஒன்றே போதுமே?

“ஆசிரியரை மறுபடியும் வேலையில் சேர்த்துக் கொள்ளக் கோரி மாணவர்கள் வேலை நிறுத்தம்”