பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————————————

முதல் தொகுதி / செல்வாக்கு557


அந்தச் செய்தியைப் படிக்க வேண்டுமென்று ஆவல் உண்டாயிற்று மாதவனுக்கு.

படித்து முடிந்ததும் நீண்ட பெருமூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளியேறிக் காற்றில் கலந்தது. மாதவனுடைய மனத்தின் ஒரு கோடியில் சிறிய ஆசை ஒன்று கவிந்தது. ஆசை, பயம், அமைதி மூன்று உணர்ச்சிகளாலும் மாறி மாறி மனம் பேதலித்தது. அந்தப் பேதலிப்பினிடையே நீலகண்டன் சிதறிவிட்டுப் போன சிறு கனற்பொறி மினுமினுத்தது. அரைமணி நேரத்திற்குப் பின் மாதவன் வாசகசாலையிலிருந்து திரும்பியபோது, அந்தப் பெண்ணை மறுபடியும் கதவோரத்தில் பார்த்தான். அதே ஆவல்! அதே சிரிப்பு! அதே நளினம்!

மாதவன் அந்த வீட்டு வாசற்படியைக் கடந்து விட்டான்.

“சார்! அப்பா உங்களை உள்ளே கூப்பிடுகிறார்!”

இனிமை கொஞ்சும் இந்தச் சொற்கள் அவள் வாயிலிருந்துதான் பிறந்தன. மாதவன் நிமிர்ந்து பார்த்தான்.

“சார்! நான்தான் கூப்பிட்டேன். இப்படி உள்ளே வாருங்களேன்!” உள்ளிருந்து வயது முதிர்ந்த ஆண் குரல் ஒன்று ஒலித்தது. வாயில் சிற்றாடையின் தலைப்பு கதவுக்கு அப்பால் மறைந்தது. மாதவன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.

உள்ளே ஈஸிசேரில் சாய்ந்துகொண்டிருந்த அந்தப் பெரியவரை வணங்கிவிட்டு எதிரே உட்கார்ந்தான்.

“குழந்தை இப்போதுதான் சொன்னாள். நீங்கள் இப்போது கலா நிலையத்தில் இல்லையாமே?”

“இருக்க விடவில்லை! அதனால் இல்லை!”

“வீட்டைவிட்டு வெளியேறாத மனிதர் நீங்கள். உங்கள்மேல் குறை சொல்ல என்ன இருக்கிறது?”


மாதவன் இதழ்களில் குறுநகை நெகிழ்ந்தது.

“இப்போது நீங்கள் சொன்ன குறைதான்.”

அவரும் சிரித்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுத் திரும்பினான் மாதவன். வீட்டுத் திண்ணையில் ஒரு கூட்டம் தயாராகக் காத்திருந்தது. பலசரக்கு மளிகை சின்னச்சாமி சிட்டைப் புத்தகத்தோடு வந்திருந்தார்.

“என்ன சார்? வேலையை விட்டு விட்டீர்களாமே?”

“தப்பு வேலை என்னை விட்டுவிட்டது.”

மாதவனுக்குச் சிரிக்கவோ, பேசவோ,இன்னும் தெம்பு குறையவில்லை. “வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போகப்போகிறீர்களாமே?” இது இன்னும் ஒரு படி அதிகமான விசாரணை. மாதவனின் சிரித்த முகம் சுண்டிப்போயிற்று. சுருங்கிவிட்டது.