பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

558நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“யார் சொன்னார்கள் அப்படி?”

சின்னச்சாமி சொல்வதற்குத் தயங்கினார்.

“சும்மா... இப்படிப் பேச்சு வந்தது... கேள்விப்பட்டேன்.”

“ஓகோ!...” மாதவன் அதற்குமேல் அவரை வற்புறுத்தித் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.

“அது சரி! நீங்கள் வந்த காரியம்...?” மாதவன் சின்னச்சாமியிடம் பேச்சைமாற்றும் நோக்கத்துடன் இப்படிக் கேட்டான்.

சின்னச்சாமி சிட்டைப் புத்தகத்தைப் பிரித்தார். இடது கையால் தலையைச் சொரிந்தார். தயங்கினார். மாதவனை நேரே பார்க்கத் துணிவின்றி எங்கோ பார்த்துக் கொண்டு பேசினார். வார்த்தைகள் நின்று இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக வெளிவந்தன.

“நம்ம கடை பாக்கி கொஞ்சம்.” வார்த்தைகள் மெதுவாக இழுபட்டன.

“ஓ! பாக்கி கொடுக்காமல் ஊரை விட்டுப் போய்விடுவேனென்ற பயமா?”

“சே!சே! அப்படியெல்லாமில்லை. இருந்தாலும். வந்து...”

அந்த ‘இருந்தாலும் வந்து’- எவ்வளவோ பொருளை உள்ளடக்கிக் கொண்ட சொற்கள்.

விறு விறுவென்று உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து ஒரு புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டைச் சின்னச்சாமியின் கையில் கொண்டு வந்து திணித்தான் மாதவன்.

“நமக்குச் சேரவேண்டிய தொகை இருபத்து மூன்றே சொச்சம் தானுங்க.”

“பரவாயில்லை! கொண்டுபோய் உங்களுக்குச் சேர வேண்டியதை எடுத்துக் கொண்டு பாக்கியை ஒழிந்தபோது கொண்டுவந்து கொடுத்தால் போதும் எனக்கு உம் மேல் நம்பிக்கை உண்டு”

சின்னச்சாமி முகத்தில் அசடு வழியச் சிரித்தார். “பாக்கி கொடுத்து அனுப்புகிறேன்” என்று சொல்லிக் கும்பிட்டு விட்டுப் போய்ச் சேர்ந்தார். அவர் தலை மறைந்ததும், திண்ணையில் ஒரு மூலையில் அதுவரை அடக்கமாக வீற்றிருந்த பால்காரர் எழுந்திருந்து தலையைச் சொரிந்தார். அடுத்த அரைமணி நேரத்தில் அங்கிருந்து பாக்கிக்காரர்களும், பெட்டிக்குள் கிடந்த புது நோட்டுக்களும் வரிசையாக வெளியேறியாயிற்று.

மாதவன் மூன்றாம் முறையாக நெஞ்சு விரிய, நடுமார்பில் ஏதோ கிளறுவதுபோல் வலிக்க, ஒரு பெருமூச்சு விட்டான்.எதையாவது படிக்கலாம் என்று அறைக்குப் போய் ஒரு புத்தகத்தைப் பிரித்துக்கொண்டு உட்கார்ந்தான். மனம் புத்தகத்தில் சிறிது கூடப் பொருந்தவில்லை.