பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————————————

முதல் தொகுதி / செல்வாக்கு559


புத்தகத்தை மேஜைமேல் விரித்தது விரித்தபடியே போட்டு விட்டு வாசல் திண்ணைக்கு வந்து மறுபடியும் உட்கார்ந்தான். தெருவில் அவனுக்குப் பழக்கமான ஒருவர் - குடை பிடித்துக் கொண்டு நடந்தவர்- அவனைப் பார்த்து விட்டவுடன் தன் முகம் தெரியாமல் குடையைச் சாய்த்துத் தணித்துக் கொண்டு வேகமாக நடந்தார். மாதவனுடைய மனத்தில் அவர் தெருவில் மட்டும் மிதித்து நடப்பதாகப் படவில்லை. தன் நெஞ்சிலேயே மிதித்துக் கொண்டு நடப்பதாகப் பட்டது. வேலையை விடுவதற்கு முன் நாளுக்குப்பத்துத் தடவை தேடிவரும் அந்த மனிதர் இப்போது நடந்து கொண்ட விதம் அவனுக்கே விந்தையாக இருந்தது.

“எதற்காகப் பித்துப் பிடித்தது போல் திண்ணையில் உட்கார்ந்து தெருவைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? இலையைப் போட்டாயிற்று சாப்பிட வா!” மாதவனின் தாய் அவனை உள்ளே கூப்பிட்டாள். மாதவன் எழுந்து சென்றான்.

“ஊரில் பெண்டு, பிள்ளைகள், சின்னஞ்சிறிசுகள், எல்லார் வாயிலும் இதே பேச்சுத்தான் மாதவா!”

- இலையில் பரிமாறிக் கொண்டே பேச்சைத் தொடங்கினாள் அவன் தாய்.

“எதே பேச்சு அம்மா?”

“தெரியாதது மாதிரிக் கேட்கிறாயே? எல்லாம் உன்னை வேலையை விட்டு விலக்கியது பற்றித்தான்...”

“எப்படிப் பேசுகிறார்கள்? விலக்கியது நல்லதென்றா? அல்லது...?” ... சொல்ல வந்ததை நிறுத்தித் தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

“நல்ல மனிதன் இந்த ஊருக்கு ஆகாதாம் என்னிடம் சொல்லிச் சொல்லி மனம் புழுங்குகிறார்கள்.”


“எல்லாம் வாய்ச்சொல்லோடு சரிதான் அம்மா யாரால் என்ன ஆகப்போகிறது?”

“அப்படியில்லை! இத்தனை ஜனங்களின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டு துணிந்து உன்னைப் போகச் சொன்னான் பார்! அவனைச் சொல்லவேண்டும்.”

அம்மாவுக்குப் பதில் சொல்லாமல் பேச்சை நிறுத்திக் கொண்டு சோற்றைப் பிசைந்தான் மாதவன். ‘பெண்களும், குழந்தைகளும், விடலைப் பிள்ளைகளும், அனுதாபப்பட்டு ஆகப் போவதென்ன? அந்த அனுதாபத்துக்கு இந்த ஊரில் எவ்வளவு செல்வாக்கு என்பது தெரியாதா; என்ன?’ என்று மனத்தில் நினைத்தான் மாதவன்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தெருவில் ஏதோ பெரிதாக இரைச்சல் கேட்டது.

“அதென்னடா தெருவில் கூப்பாடு”


“நீதான் போய்ப் பார்த்துவிட்டுவாயேன் அம்மா”