பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

560நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


அம்மா கரண்டியைக் கீழே வைத்துவிட்டு வாசற் பக்கம் போனாள். பத்து நிமிஷம் கழித்துக் கூப்பாடு ஒலி குறைந்து கிழக்குப்புறம் தெருவில் சென்று மங்கியது. அம்மா சிரித்துக் கொண்டே உள்ளே வந்தாள்.

“என்னம்மா விஷயம்” என்று மாதவன் ஆவலோடு கேட்டான்.

“எல்லாம் உன் விஷயந்தான்! கலா நிலையத்துப் பையன்களும், பெண்களும், ‘மாதவன் சாருக்கு மறுபடியும் வேலை கொடு’ என்று கூப்பாடு போட்டுக்கொண்டு தெருவில் ஊர்வலம் போகிறார்கள்.

“நிஜமாகவா? என்னைக் கேலி செய்கிறாயா?”

“பின் என்ன பொய்யாசொல்கிறேன்? உனக்குச் சந்தேகமாக இருந்தால் சாப்பிட்டு விட்டு நீயே எழுந்து போய்ப் பாரேன்!”

திடீரென்று அந்தக் கணத்திலேயே பசி தீர்ந்துவிட்டது போலிருந்தது மாதவனுக்கு. இலையில் பரிமாறிய சோற்றில் அவன் ஒரு பருக்கை கூடத் தொடவில்லை. விறுட்டென்று எழுந்து கிணற்றடிக்குச் சென்று கையைக் கழுவிவிட்டு வந்தான், மாதவன்.

“என்னடா இது? இலையில் போட்ட சோற்றை வைத்துவிட்டு...?”

“இரு அம்மா! வந்து சாப்பிடுகிறேன்” என்று மாதவன் எழுந்து தெருவுக்கு விரைந்தான். தனக்காக நடக்கும் அந்த அனுதாப ஊர்வலத்தைத் தானே பார்க்க வெட்கமாக இருந்தது அவனுக்கு. ஜன்னல் கதவுகளைத் திறந்து மற்றவர்கள் தன்னைப் பார்த்துவிடாமல் தான் அந்த ஊர்வலத்தைப் பார்க்க முயன்றான் அவன்.

பெண்களும், ஆண்களுமாகக் கூடிச் சென்ற அந்த ஊர்வலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தெரிந்த முகங்களில் இரண்டு, மாதவனின் மனத்தில் பதிந்தன. கம்பீரம் தவழும் ஆண்மை நிறைந்த நீலகண்டனின் முகம். ஆவல், சிரிப்பு, நளினம், அத்தனையும் திகழ அவனை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க விரும்பும் அந்தப் பெண்ணின் முகம்! மாதவன் தெருவில் இறங்கி நடக்கும் போதெல்லாம் கதவோரத்தில் தெரியும் அந்தக் கண்கள் உண்மையாக அவன்மேல் அனுதாபம் கொண்டவைதாம்.

ஜன்னல் கதவுகளை அடைத்துவிட்டு உள்ளே திரும்பினான் மாதவன். அந்த நிமிடத்தில் உலகத்திலேயே தனக்கு இணையானவர்கள் எவரும், எங்கும் இல்லை என்பது போன்றதொரு பெருமிதம் அவனுக்கு உண்டாயிற்று.

“நன்றாயிருக்கிறதடா உன் காரியம்! இலையில் போட்ட சோற்றை ஆறவைத்துவிட்டுத் தெருவில் போய் உன் பெருமையை நீயே வேடிக்கை பார்க்கிறாயாக்கும்? இப்படிக் கூச்சல் போட்டுக் கொண்டு தெருவோடு இவர்கள் ஊர்வலம் போனதால் நாளைக்கே உன்னைக் கூப்பிட்டு வேண்ல பார்க்கச் சொல்லிவிடப் போகிறார்கள் பார்!”-தாயின் இந்தப் பேச்சில் குத்தல் இருந்தது.