பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————————————

முதல் தொகுதி / செல்வாக்கு561


“வேலை யாருக்கு வேண்டும்? இந்த அன்பும் அனுதாபமும் தருகின்ற பெருமையை வேலை தர முடியுமா?” என்று கேட்டான் மாதவன். மாதவனுடைய பேச்சு அவன் தாய்க்குப் பிடிக்கவில்லை.

“நீதான் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டும் உன் காரியத்தை. நான்கு நாட்களாக வேலையையும் விட்டு விட்டு இந்த ஊரில் என்ன காரியம்? இப்படியே இருந்தால் வேறு வழி பார்க்க வேண்டாமா?”

“பார்க்கத்தான் வேண்டும். வீட்டை ஒழித்துச் சாமான்களைக் கட்டு. இரண்டு நாளில் புறப்படவேண்டியதுதான்.”

தாய், மாதவனின் முகத்தை வியப்போடு பார்த்தாள். மாதவன் நிம்மதியாக அறைக்குள் வந்து மேஜைமேல் விரித்துக் கிடந்த புத்தகத்தில் ஆழ்ந்தான்.

“ஏன்டா, சாப்பிடவில்லையா?”

“இப்போது பசிக்கவில்லை. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.” கூறிவிட்டுப் புத்தகத்தின் கருத்துக்களில் மனத்தைப் பதியவிட்டான் அவன்.

மறுநாளைக்கு மறு நாள் கையில் டிரங்குப்பெட்டியும், மூட்டை முடிச்சுக்களுமாக, மாதவன் அந்த ஊரையும், வேலையையும் விட்டு விட்டுப் புறப்பட்டு விட்டான். கையில் பெட்டியோடு அவன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். நான்கடி பின்னால் அவன் தாய் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அப்போது கண் நிறைய ஆவலும், இதழ் நிறையக் குறு நகையும், உடல் நிறைய நளினமுமாக அந்தப் பெண்-அதே கதவோரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெண்ணின் அனுதாபமும் நீலகண்டனின் ஆவேசமும், அவன் இழந்த வேலையை அவனுக்கு வாங்கிக் கொடுக்கும் அளவிற்குச் செல்வாக்கு உடையவை இல்லை!

செல்வாக்கெல்லாம் நரைத்த தலையும், முதிர்ந்த வயதும், முதிராத மனமுமுள்ள பெரியவர்கள் கையிலிருந்தது. அதைப்பற்றி மாதவன் கவலைப்படவில்லை.

அந்தக் கண்களின் ஆவலை இறுதியாகத் தன் மனம் நிறைய ஏந்திக்கொண்டு திரும்பிப் பாராமல் தெருவில் நடந்தான் மாதவன்!

(1963-க்கு முன்)


நா.பா. 1 - 36