பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/565

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————————————

முதல் தொகுதி / பேதைமை563


“அக்கா ஏன் எழுந்திருக்க மாட்டா?”

“அவ செத்துப் போயிட்டாடா!”

“எதுக்காகச் செத்தாளாம்? அவ மட்டும் ஏன் சாகனும்?”

“அவளை சுவாமி அவர்கிட்ட அழச்சிண்டுட்டார். அதுனாலே அவ செத்துப் போயிட்டா!”

“சுவாமி ஏன் அக்காவை மட்டும் அழச்சுக்கணும்? என்னையும் கூட்டிக்கப் படாதோ?”

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல அந்த அம்மாளுக்குத் தெரியவில்லை. தூரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ராமுவின் அப்பா வேங்கடராம ஐயருக்குக் கண்களில் நீர் தேங்கிவிட்டது. மேல் வேஷ்டியால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ராமுவின் பிடிவாதம் அதிகமாயிற்று. கீழே கிடத்தப்பட்டிருந்த ரங்கு அக்காவை எழுப்புவதற்காக ஆட்டி அசைத்துத் தொந்தரவுகள் செய்யலானான். சுற்றி உட்கார்ந்து தலைவிரி கோலமாக அழுது கொண்டிருந்த பெண்களால் அவனை அடக்கவோ கண்டிக்கவோ முடியவில்லை.

வேங்கடராம ஐயர் எழுந்திருந்து வந்தார். அழுது கொண்டிருந்தவர்கள் அடக்க ஒடுக்கமாக ஒதுங்கி நின்று வழி விட்டார்கள்.

“அக்கா எழுந்திரு அக்கா!”

“சாதம் போட நாழியாச்சு எனக்குப் பள்ளிக்கூடம் போகணும்” ராமு அனத்திக் கொண்டிருந்தான். அங்கே வந்த வேங்கடராம ஐயர் அவனை வாரி எடுத்துத் துக்கிக் கொண்டு போனார்.

பெண்கள் கசமுசவென்று அழுகைக்கிடையே பேசிக் கொண்டார்கள்.

“ரங்குதான் தினம் இந்தப் பிள்ளைக்குக் காலங்கார்த்தாலே எழுந்ததும் சாதம் பிசைஞ்சு போடுவாள். இந்த ரெண்டரை வருஷமா அவ கையாலே பழையது சாப்பிட்டுப் பழக்கம் இதுக்கு.”

“ஐயோ பாவம், பசலைதா”னே? அவதூங்கறான்னு நினைச்சிண்டிருக்கு!”

“குழந்தைதானே! ஏதோ அஞ்ஞானம்! பழக்கம் அப்படி; அவ போயிட்டான்னு தெரியலே அதுக்கு”

“பாவிப் பெண்! புருஷன் வீட்டிலேதான் பூவும் மஞ்சளுமா வாழக் கொடுத்து வைக்கலேன்னா, இங்கே வந்து இப்படியா அல்பாயுசா போகனும்”

“வேங்கட்ராமன் ஏற்கெனவே ஆத்துக்காரியை எமன் கையில் விட்டுட்டுக் கஷ்டப்பட்டு நாளைக் கடத்திண்டிருந்தான். இந்தப் பிள்ளை ராமுவைப் பிரசவிச்சுட்டுச் செத்தா அவ! இப்போ வீட்டோட அடைஞ்சு கிடந்த பெண்ணும் இப்பிடிப் போயிட்டா.”