பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/566

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

564நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“குழந்தைக்கு வயசு போறாது ஒத்தனா இருந்துண்டு எப்படி வச்சுக் காப்பாத்தி ஆளாக்கி விடப் போறானோ?”

“எல்லாம் இந்தப் பிள்ளை பிறந்த வேளைதான்! இதைப் பெத்த மூணாம் நாள் பெண் அறுத்துட்டு வந்து நின்னா! அதே ஏக்கம். ஏழாவது நாள் அவ விதவைப் பெண்ணையும் இந்தக் குழந்தையையும் அவனையும் விட்டுட்டுப் போய்ச் சேர்ந்தா.”

பெண்களின் இந்த சம்பாஷணைகள் எல்லாம் கையில் ராமுவைப் பிடித்துக் கொண்டு சற்றுத் தொலைவில் நின்ற வேங்கடராம ஐயருக்கும் கேட்டன.

பெண் வாழாவெட்டியாக வந்து விட்டாளே என்ற கவலை ஒரு புறமிருந்தாலும் வீட்டைக் கட்டிக் காத்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளும் அவரைக் கைவிட்டுப் போய்விட்டாள்.

‘நாள் தவறாமல் காலையில் அவள் கையால் சாதம் சாப்பிட்டுப் பழகிப்போன இந்தக் குழந்தை ராமுவுக்குக் கூட அவள் செத்துவிட்டாள் என்பதை நம்ப முடியவில்லை. நானும் அப்படி இருந்துவிட முடியுமா?’ - என்று அவர் தமக்குள் சிந்தித்தார்.

மனிதர்கள் பெரியவர்களாவதன் பலன், துக்கத்தை உணர்கின்ற அறிவைப் பெறத்தானா? செத்தவனைத் தூங்குகிறான் என்றெண்ணிக் கொண்டு, உரிமையோடு எழுப்பிச் சாதம்போடக் கூப்பிடுகிறது இந்தக் குழந்தை. பாசமும் உறவுமுள்ளவர் செத்துப் போனாலும், இவனைப் போல அந்தச் சாவை உணராத பேதைமை எல்லா மனிதர்களுக்கும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

“அப்பா! ரங்கு அக்காவை நீயாவது எழுப்பு அப்பா! வயித்தைப் பசிக்கிறது. பழையது பிசிஞ்சு போடச் சொல்லணும்” என்று ராமுவின் அனத்தல் பழையபடி ஆரம்பித்து விட்டது. அவருடைய சிந்தனை கலைந்தது.

“ரங்கு அக்கா செத்துப் போயிட்டாடா ராமு! நீ சமர்த்தோ இல்லையோ? இப்படி அழுது மொரண்டு பண்ணப்படாது. உனக்கு வேறே யாரையாவது போடச் சொல்றேன்.”

“வேண்டாம் போ... நீ பொய் சொல்றே. ரங்கு அக்கா ஒண்ணும் செத்துப் போகலை, அவ தூங்கறா - வேணும்னா நான் எழுப்பறேன்...”

ராமு மறுபடியும் ரங்கு அக்காவின் சடலத்தை நோக்கி ஓடினான்.

பரபரவென்று அவன் கையைப் பிடித்து இழுத்து வந்து உட்கார்த்தினார் அவர். தம் மனத்தையாவது சமாதானப்படுத்தி அடக்கிக் கொள்ளலாம் போலிருந்தது; ராமுவை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது தான்.அவருக்குப் புரியவில்லை.

யாரோ ஒருவர் பக்கத்திலிருந்த ஹோட்டலுக்குப் போய் இரண்டு இட்டிலி வாங்கிவந்தார். வேங்கடராம ஐயர் பாதி நயமாகவும் பாதி பயமுறுத்தியும் அவனைச் சாப்பிடச் செய்துவிடலாம் என்று எண்ணினார்.