பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————————————

முதல் தொகுதி / பேதைமை565


“இது எனக்கு வேண்டாம் போ!ரங்கு அக்கா ஈயக் கச்சட்டியிலே பிசிஞ்சி போடுவாளே, அந்தப் பழய சாதந்தான் வேணும். அக்காவை எழுப்பு.”

குழந்தை இட்டிலிப் பொட்டலத்தைக் காலால் எத்தி உதைத்துவிட்டான். துக்கம் நிறைந்த மன நிலை, சகிப்புத் தன்மை, எல்லாவற்றையும் மறந்து ஒரே ஒரு கணம் கோபத்திற்கு ஆளாகிவிட்டார் அவர்.

பளீரென்று அடுத்தடுத்து அவனுடைய முதுகில் இரண்டு அறைகள் விழுந்தன. ராமு. கீழே விழுந்து காலை உதைத்துக் கொண்டே வீறிட்டு அழுதான்.

“அக்கா ரங்கு அக்கா! ... அப்பா அடிக்கிறா, அக்கா... நீ ஏந்திருந்து வந்து பார்க்கமாட்டியா?”

திடீரென்று எழுந்திருந்து ஓடியவன் அக்காவின் சடலத்தருகே சென்றுவிட்டான். தலை மயிரைப் பிடித்துப் பிய்த்து இழுத்து அவளை எழுப்ப முயன்றான்.

“அடராமா! குழந்தையை இப்படிக் கிட்டே விடுவாளோ? ஆகாத காரியம்னா?” என்று அலுத்துக்கொண்டே வயதான பாட்டியம்மாள் ஒருத்தி மீண்டும் குழந்தை ராமுவை எடுத்து இழுத்து வந்து அவரருகில் விட்டாள்.

வேங்கடராம ஐயர் திமிறி ஒட முயல்கிற குழந்தையைக் கைகளால் இறுக்கிப் பிடித்துக்கொண்டார்.

“நீங்களே குழந்தையை வைத்துக் கொண்டிருந்தா மேலே காரியங்களைச் செய்ய வேண்டாமா? யாரிட்டவாவது சமாதானப் படுத்தி விட்டுட்டு வாங்கோ காரியங்கள் நடக்கணுமில்லையா? நாழிகை ஆயிண்டே இருக்கு!”. புரோகிதர் அவசரப்படுத்தினார்.

இதற்குள் அங்கிருந்த ஒருவர் தந்திரமாக ஒரு காரியம் செய்து குழந்தை ராமுவை விலக்கிக் கூட்டிக்கொண்டு போக முன்வந்தார்.

“ராமு! கடைக்குப்போய் நிறையப் ‘பப்பெர்மிட்’ வாங்கிண்டு வரலாம். ரங்கு அக்காவுக்குக் கூடக் கொஞ்சம் கொடுக்கலாம்.”

"கொடுத்தா ரங்கு அக்கா எழுந்திருந்து சாதம் போடுவாளா?”

“கட்டாயம் போடுவா! அவளுக்கு மிட்டாய் கொடுத்தியானா உன்மேலே ரொம்பப் பிரியம் உண்டாகும்.”

“நிசம்மாவா?”

“ஆமாம் ராமு, நிசம்மாத்தான்.”

“அப்ப வா, கடைக்குப் போகலாம்.”

“நீங்க காரியத்தைப் பாருங்கோ. நான் இவனைக் கொண்டுபோய்க் கவனிச்சுக்கிறேன்” என்று ஜாடையாக வேங்கடராம ஐயரிடம் கூறிவிட்டுக் குழந்தை ராமுவைத் தூக்கிக்கொண்டு போனார் அந்த சாமர்த்தியக்காரர்.