பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/569

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————————————

முதல் தொகுதி / பேதைமை567


“என்னடா வேணும்? கேளு! சொல்றேன்.”

“செத்துப் போறதுன்னா என்னடா? உனக்குத் தெரியுமாடா?”

கோவிந்தனுக்குச் செத்துப்போவதைப் பற்றிய ஒரே ஓர் அனுபவம்தான் இதுவரை தெரியும் அவனுடைய அத்தை ஒருத்தி விளிம்புச் சுவர் இல்லாத கிணற்றில் தண்ணீர் தூக்கும்போது காலில் தாம்புக்கயிறு பின்னி உள்ளே விழுந்து செத்துப் போனாள். இதுதான் செத்துப் போவது பற்றிக் கோவிந்தனுக்குத் தெரிந்த ஒரே ஓர் அனுபவம்.

எனவே, இந்த அனுபவத்தை அனுசரித்தே ராமுவின் கேள்விக்கு அவன் பதில் கூறினான்.

“செத்துப்போறதுன்னா... கிணத்திலே விழுந்துடனும்டா, அதுதான் செத்துப் போறது... எங்க அத்தை அப்படித் தாண்டா செத்துப்போனா.”

“அப்போ கிணத்திலே விழுந்தா நிச்சயமா செத்துப் போயிடலாமாடா?”

“ஆமாண்டா!”

“அப்படியானா எங்க ரங்கு அக்கா கிணத்துலே விழவே இல்லியே. அவ செத்துப்போயிட்டான்னு அப்பா சொல்றாரே! அது எப்பிடிடா கிணத்துலே விழாமே சிெத்துப் போக முடியும்?”

“அதென்னமோ எனக்குத் தெரியாதுடா.”

“அப்பா பொய்தாண்டா சொல்றார்.”

“பொய் இல்லேடா! உங்க ரங்கு அக்கா நெசமாகவே செத்துப் போயிட்டாடா. நேத்துச் சுடுகாட்டிலே கூடக் கொண்டு போய் நெருப்பை வச்சுட்டாளே.”

“அய்யய்யோ, அக்காவுக்குச் சுடாதோ?”

“அதென்னமோ எங்க அத்தை செத்துப் போனபோது கூட இப்படித்தான் நெருப்பை வச்சா.செத்துப்போயிட்டா அவாளுக்கெல்லாம் சுடாது போலிருக்குடா!”

“ஏன்டா கோந்து! செத்துப்போனா அவாளை அப்பறம்பாக்க முடியாதோடா?”

“செத்துப் போனவாளைச் செத்துப் போனவாதாண்டா பாக்க முடியும்.”

“அப்போ, நீ செத்துப்போனா இப்பவே உங்க அத்தையைப் பார்க்கலாம். நான் செத்துப்போனா உடனேரங்கு அக்காவைப் பார்க்கலாம். இல்லியாடா கோந்து?”

“பாக்கலாண்டா.”

“சத்தியமா?”

“பாக்கலாண்டான்னா.”

அன்று பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருந்த நேரம் முழுவதும் செத்துப் போவதைப் பற்றிய சிந்தனையிலேயே முழுக்க முழுக்க ஆழ்ந்து போயிருந்தான் குழந்தை ராமு.