பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————————————

முதல் தொகுதி / பேதைமை569


“செத்துப் போகறதுக்காக.”

“அதுக்கு இப்போ என்ன அவசரம்?”

“செத்துப்போனாத்தான் செத்துப் போனவாளைப் பார்க்கலாமாம். எனக்கு உடனே ரங்கு அக்காவைப் பார்க்கணும். அதுனாலேதான் செத்துப் போறத்துக்காகக் கிணத்துலே குதிச்சேன்.”

“செத்துப்போறதுன்னாக் கிணத்திலேதான் குதிப்பாளோடா?”

“அப்படித்தானே அடுத்தாத்துக் ‘கோந்து’ சொன்னான்!”

வேங்கடராம ஐயர் அடுத்த வீட்டுக் கோவிந்தனைத் தனியே அழைத்து மிரட்டி விசாரித்தார். அவன் காலையில் பள்ளிக்கூடம் போகும்போது ராமு தன்னிடம் கேட்ட கேள்விகளையும் தான் அவற்றிற்குக் கூறிய பதில்களையும் ஒன்று விடாமல் அப்படியே சொல்லிவிட்டான். எல்லாவற்றையும் கேட்டபோது அவருக்குச் சிரிப்புத்தான் வந்தது.

பெண்ணைப் பறிகொடுத்த துயரையும் மறந்து, ஒரு விநாடி அவர் தமக்குள் சிரித்துக்கொண்டார்.

‘இந்த உலகத்தில் அறிந்து உணர்ந்து அனுபவங்கள் பெறுவதில் உண்மையான இன்பமில்லை. ஒன்றையும் அறியாமல் இருக்கிறதே குழந்தை; அதனுடைய பேதைமையில்தான் இன்பம் இருக்கிறது!’ என்று மனப்பூர்வமாகத் தோன்றியது அவருக்கு.

ராமு ஏதோ கேட்க ஆரம்பித்தான்.

“அப்பாவ்!”

“என்னடா?”

“ரங்கு அக்காவைச் சுடுகாட்லே கொண்டுபோய் நெருப்பெ வச்சு எரிச்சுட்டேளாமே அப்பா?”

“யார் சொன்னாடா?”

“கோந்து தாம்ப்பா சொன்னான்.”

“இன்னும் என்ன சொன்னான்.”

“செத்துப்போனவாளுக்கு நெருப்புச் சுடாதுன்னு கூடச்சொன்னான் அப்பா”

“உம்ம்ம்..”

அவருக்குத் திரும்பவும் சிரிப்பு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார். குழந்தை தப்பாக நினைத்துவிடக் கூடாதே, அதற்காக

(1963-க்கு முன்)