பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / மங்கியதோர் நிலவினிலே571



பரமசிவம் போனதும் அவர் குடியிருந்த வீடு காலியாக வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. தெரு வழியாகப் போகும்போதும் வரும்போதும் அந்த வீட்டைப் பார்த்து ஏங்குவேன். அந்த ஏக்கத்தோடு ஏக்கமாக ‘இந்த உலகத்தில் மனம் விட்டுப் பழகுகிற நட்பு இருக்கிறதே; அதைவிடப் பெரிய விஷயம் ஒன்றுமே இல்லை. நட்புக்கு ஈடு நட்புதான்’ என்றும் எண்ணிக்கொள்வேன். ‘நிழலருமை வெயிலிலே’ என்று சொல்வார்களே, அதுபோலப் பரமசிவத்தின் நட்பின் அருமை அவர் இல்லாத போதுதான் என் மனத்தில் பெரியதோர் தாபமாக உருவெடுத்து உறைத்தது.

3

சொல்லிவிட்டுப் போயிருந்ததுபோல் ஒரு வாரத்தில் பரமசிவம் கடிதம் எழுதியிருந்தார்.

“இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயற்கை வளம் மிகுந்த மலைத் தொடரின்மேல் நாலாயிரத்துக்கு மேற்பட்ட அடி உயரத்தில் சிறிய ஊர். குளிர்ச்சியும் பசுமையும் நிறைந்த இடம். கோடைக்கானலில் ‘சீஸன்’ காலத்தில் தங்கியிருப்பது போலத் தோன்றுகின்றது.பல மைல் விஸ்தீரணத்துக்குப் பரந்த பெரியாறு ஏரி, மலைச் சிகரங்களுக்கு நடுவே கண்ணாடி பதித்ததுபோலத் தோன்றுகிறது. மின் விசைப் படகை (லாஞ்ச்) எடுத்துக் கொண்டு, இந்த ஏரியில் மைல் கணக்காகச் சுற்றுவது ஒரு ரஸமான பொழுதுபோக்கு. இரண்டு கரையிலும் கூட்டம் கூட்டமாகக் காட்டு மிருகங்கள் திரிவதைப் படகிலிருந்து ‘பைனாகுலர்’ மூலம் பார்க்கலாம். கரையோரமாகப் படகைச் செலுத்தினால் பைனாகுலர் இல்லாமலேயே பார்க்கலாம். சுகவாசத்துக்கு ஏற்ற இடம்தான்; சந்தேகமே இல்லை.

இருந்தாலும் என் மனத்தில் நிம்மதி இல்லை. திடீரென்று உங்கள் நட்பும் பழக்கமும் பல மைல் தொலைவுக்கு அப்பால் போய் விட்டதுபோல ஒர் ஏக்கம் என்னை வாட்டுகிறது. சதா உங்களைப் பற்றிய நினைவுதான். இப்படியே தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு உங்களைப் பார்க்காமலோ, பேசாமலோ இருந்தேனானால், எனக்குப்பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும் போலிருக்கிறது.எனவே, தயவுசெய்து கண்டிப்பாக இரண்டு மூன்று நாளில் உங்களை இங்கே எதிர்பார்க்கிறேன்.”

இக் கடிதம் பரமசிவத்தோடு எனக்கு இருக்கும் நட்பின் ஆழத்துக்குச் சாட்சி கூறிற்று. ‘ஆகா! இது அல்லவா நட்பு? நான் பரமசிவத்தின் பிரிவால் என்ன ஏக்கத்தை அடைந்திருந்தேனோ, அதே ஏக்கத்தை என் பிரிவால் அவரும் அடைந்திருக்கிறார். இதுதானே உயிருக்குயிரான உண்மை நட்புக்கு அடையாளம்!’ என்று எண்ணினேன். உடனே, மறுநாளே பரமசிவத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, நான் புறப்பட்டு வருகிறதேதி குறித்து அவருக்கு ஒரு பதில் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்துவிட்டேன். சீக்கிரமே புறப்படவும் செய்தேன்.

உத்தமபாளையம், கம்பம், கூடலூர் இவைகள் மதுரை ஜில்லாவின் மேல்கோடிப் பிரதேசங்கள். கூடலூருக்கு மேற்கே குமிழி என்ற இடம் வரையில்தான் சென்னை