பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

578நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

உடனே வரவில்லை. அன்று அவரால் சோழவந்தானிலிருந்து பஸ் ஐந்து நிமிஷம் ‘லேட்’டாகப் புறப்பட வேண்டியதாயிற்று.

இதனால் கோபமடைந்த கண்டக்டர், அந்த ஆள் பஸ்ஸில் வந்து உட்கார்ந்ததும், ஆத்திரம் பொங்கும் குரலில், “உங்களைப்போல ஆளுங்க எல்லாம் பஸ்ஸுலே ஏன் ஐயா வந்து உசிரை வாங்குறீங்க? சே! சே! டயத்துக்குப் போய்ச் சேரலைன்னா எங்களைக் கம்பெனிலே சும்மா விடுவானா? நீர் என்னையாமனுஷன்? அஞ்சு நிமிஷம் லேட்டாக்கிட்டீரே, ஐயா!” என்று பொரிந்து தள்ளினான்.

அந்த ஆள் முரட்டுத்தனம் மிக்கவர் என்பது, கண்டக்டருக்கு அவர் கூறிய கண்டிப்பான பதிலிலிருந்தே தெரிந்தது.

“அட, சரிதான் நிறுத்து வேய்! எனக்குத் தெரியாதோ, உங்க பஸ்ள டயத்துக்குப் போற லட்சணம்? சும்மா எங்கிட்டவச்சுக்கிடாதே, இந்த மிரட்டல் எல்லாம். எத்தனை நாள் நடுரோட்டிலே நின்னுக்கிட்டு சண்டித்தனம் பண்ணியிருக்கு உங்க பஸ்? என் கை வவிக்க நான் தள்ளியிருக்கேனே, தம்பீ! அது மாதிரி இன்னைக்கும் கொஞ்ச நேரம் சண்டித்தனம் பண்ணினதாக நினைச்சிட்டுப் போவையா? எங்கிட்ட மோதுறே!”

“ஐயா! ஐயா! நீங்கலேட்டாக்கினதுனாலேகூடத் தோஷமில்லை. உங்க கருநாக்குப் பிடிச்ச வாயாலே பஸ்ஸைப் பத்தி எதுவும் சொல்லி வைக்காதீங்க! நடு வழிலே நின்னுடப் போவுது!” அந்த ஆளைச் சமாதானப்படுத்துவது போல டிரைவர் கூறினான். இதற்கு அப்புறம் இந்தப் பேச்சு வளரவில்லை.

இப்போது தற்செயலாகக் காக்கை உட்காரப் பணம் பழம் விழுந்தது என்கிற கதையாகப் பஸ் நின்று விடவே, எல்லோரும் அந்த முரட்டு மனிதரை வாய்க்கு வந்தபடி ஆக்ரோஷமாகத் திட்டத் தொடங்கிவிட்டார்கள்.

பட்டாபியும் நானும் இறங்கி, பட்டாபியின் மாமனார் வீட்டில் இரவு தங்க முடிவு செய்து கிளம்பினோம். வழியில் என் மனத்தில் உறுத்திய சந்தேகத்தைக் கேட்டேன். ‘கருநாக்கு’ என்றால் என்ன?

பட்டாபி சொன்னார், “சிலருடைய வாக்குக்குத் துர்த்தேவதைகள் கட்டுப்படுவதுபோல, கருநாக்குக்காரர்களுக்கு ஏகதேசம் சொற்கள் கட்டுப்பட்டுத் தன் விளைவை உண்டாக்குகின்றன. இதற்கு உதாரணமாக, பிரத்தியட்சமாக நடந்த நிகழ்ச்சி ஒன்றை எடுத்து, உங்களுக்கு நான் சொல்ல முடியும். அந்த நிகழ்ச்சியைக் கேட்டால், எப்படியும் நீங்கள் இந்த மாதிரி விஷயத்தில் கொஞ்சம் நம்பிக்கை கொள்ளத்தான் வேண்டியிருக்கும்...” என்று அழுத்தமான தொனியில் கூறினார்.

“என்ன அது?” என்றேன் ஆவலுடன்.

“கதை இல்லை; உண்மையாகவே என் கண்காண நடந்தது” என்ற பீடிகையோடு நண்பர் பட்டாபி கூறத் தொடங்கினார்.