பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கருநாக்கு 581

அவசியம் கிடையாது.” திரும்பவும் நான் அதிகாரத் தொனியில் இப்படி அதட்டவே, நடராஜ அம்பலம் வாயை மூடிக்கொண்டு ‘கப்சிப்’ என்று நின்று விட்டார்.

உடன் வந்து சதி நடக்கும் இடத்தைக் காட்டுவதாகவும் ஒப்புக்கொண்டார்.

ப்படியும் இப்படியுமாகக் கோடித்துக்கொண்டு நாங்கள் பண்ணைக் காட்டிற்குப் புறப்படும்போது, மணி ஒன்பதரைக்குமேல் ஆகிவிட்டது. வழித்துத் தடவி வைத்ததுபோல மையிருட்டு. மழைக் கோப்பாக இருந்ததனால், அண்ட முகட்டை அணுத் துண்டுகளாகப் பிளந்தெறிந்து விடுவதுபோல வானில் இடி முழக்கம் வேறு குமுறிக் கொண்டிருந்தது. எங்கள் லாரி கோடைக்கானல் மலையின் அடிவாரத்திற்குப் போய்ச் சேர்ந்தபோது, சோனாமாரியாக மழை பிடித்துக் கொண்டுவிட்டது. இடியும் மின்னலும் மழையும் இருட்டுமாக ஒரு பெரும் பைசாசச் சூழ்நிலையில் லாரி பண்ணைக் காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. லாரிக்குள் பத்து ரிசர்வ் போலீஸ்காரர்களும், நானும், நடராஜ அம்பலமும், ஒரு டிரைவரும் இருந்தோம்.

அப்பப்பா! இப்போது நினைத்தால் குடல் நடுங்குகிறது. அன்றைக்கு இடித்த மாதிரி இடிகளை நான் வேறெந்த மழை நாளிலும் இன்றுவரை கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. சாலையில் லாரி சென்றுகொண்டே இருக்கும்போது “படபட” வென்று இடிக்கு இலக்கான மரங்கள் முறிந்து விழும் ஒசைகள், பச்சைமரம் இடியால் தீயுண்டு எரியும் கோரத் தோற்றம், இவைகளைக் கேட்கவும் காணவும் சகிக்கவில்லை. கோடைக்கானலிலிருந்து பண்ணைக் காட்டிற்கு மிகக் குறுகிய தொலைவுதான். ஆனால், காட்டு ஓடைகளில் தண்ணீர் வடியும்வரை பொறுத்திருந்தும், சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி வழி உண்டாக்கிக் கொண்டும் போனதால், பதினொன்றரை மணி சுமாருக்குத்தான் பண்ணைக் காட்டை அடைய முடிந்தது. பண்ணைக் காட்டில் ஊர் அரவம் அடங்கிப் போயிருந்தது.

பேயாண்டி அம்பலத்தின் வெற்றிலைக் கொடிக்காலுக்கு இரண்டு பர்லாங் இப்பக்கம் தள்ளியே லாரியை நிறுத்தி, டிரைவரை அதற்குக் காவல் வைத்துவிட்டு, நாங்கள் பன்னிரண்டு பேர் மட்டும் மழையில் நனைந்து கொண்டே கொடிக்காலை அடைந்தோம்.

“இந்தக் கொடிக்கால்களிலே பச்சைப் பாம்பு அதிகமுங்க ஜாக்கிரதையா இருக்கணும்” என்று எச்சரித்தார் நடராஜ அம்பலம்.

அம்பலம் முன் வழிகாட்டிச் செல்ல, நான் பின்பற்றி நடந்தேன்.

குளம் போலப் பரந்திருந்த ஒரு கிணற்றின் கரையில் நாற்புறமும் திறந்த ஒரு தகரக் கொட்டகை, கொடிக்காலின் நடுமையம் அந்த இடம் கொட்டகைக்குக் கதவு இல்லை யாகையினால், இருளில் மறைந்து நடப்பதைக் கவனிக்க எங்களுக்கு அதிகச் செளகரியமாக இருந்தது. அம்பலம் சுட்டிக் காட்டிய திசையில் பார்வையைச் செலுத்தினேன்.