பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/586

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

584நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

லாரிக்குச் சென்றோம். லாரி ஒன்றரை மணி சுமாருக்குக் கோடைக்கானலுக்குப் புறப்பட்டது.

இடையில் ஒரு பாட்டம் பெய்து ஓய்ந்திருந்த மழையும் இடியும், மீண்டும் ஆரம்பமாகியிருந்தன.

லாரி போய்க்கொண்டிருக்கும்போதே, “ஏன் ஸார் இன்ஸ்பெக்டர் ? எங்களைக் கோடைக்கானலுக்குத்தானே கொண்டுபோகிறீர்கள்” என்று எதையோ நினைத்துக் கொண்டு கேட்பவர்போல, நம்பிராஜ ஐயர் திடீரென்று கேட்டார்.

“அதை நீர் ஏன் ஐயா கேட்கிறீர்? எங்கே கொண்டு போக வேண்டுமோ, அங்கே கொண்டுபோக எங்களுக்குத் தெரியும். நீர் உம்முடைய கருநாக்கை அடக்கிப் பேசாமல் வாரும்” என்று அமுத்தலாக அவருக்குப் பதில் கூறினேன் நான்.

“நான் அதற்குச் சொல்ல வரவில்லை, சார்! உங்கள் கோடைக்கானல் ஹில் ஸ்டேஷனில் இப்போது மனிதர்கள் தங்குவதற்கு முடியாதே என்றுதான் விசாரித்தேன்.”

“வாயை வைத்துக்கொண்டு சும்மா வாரும். மனிதர்கள் தங்க வசதி இல்லாவிட்டால் போகிறது; உங்களைப் போன்ற புரட்சிப் புலிகள் எல்லாம் தங்கலாம். அல்லவா” என்றேன்.

“எங்களை ‘மிருகங்கள்’ என்று மறைமுகமாக நீங்கள் குத்திக் காட்டுவது எனக்குப் புரிகிறது, இன்ஸ்பெக்டர். ஆனால் இந்த மிருகங்கள் தங்குவதற்குக்கூட இடம் ஹில் ஸ்டேஷனில் இப்போது கிடையாதே? அவ்வளவேன் சார்? ஹில் ஸ்டேஷனே இப்போது இல்லை! போங்கள்!”

“ஏன்?...” நான் கேட்டேன்.

“சற்று முன் வீழ்ந்த பயங்கரமான இடி விபத்துக்கு ஆளாகி, உங்கள் ஹில் ஸ்டேஷன் தரைமட்டமாகி விட்டதற்காக என் ஆழ்ந்த அனுதாபங்கள் இன்ஸ்பெக்டர்!”

“என்ன? இடி விபத்தா?’ ஆச்சரியம் தாங்கமுடியாமல் கூவியது என் வாய். டிரைவரை லாரியை வேகமாகச் செலுத்தும்படி தூண்டினேன்.

விரைவில் லாரி கோடைக்கானலை அடைந்து ஸ்டேஷன் வாசலில் போய் நின்றது.

அவசர அவசரமாகக் கீழே இறங்கிப் பார்த்தேன். கண்களைக் கசக்கிக்கொண்டு இமைக்காமல் பார்த்தேன். எங்கள் ஸ்டேஷன் கட்டிடம் நொறுங்கித் தரை மட்டமாக்கப்பட்டிருந்தது, இடி விபத்தால்!

“என்ன இன்ஸ்பெக்டர், நான் சொன்னது நிஜம்தானே?”