596★நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
—————————————————————————
“எசமான்...” சின்ன மாயன் விளக்குமாற்றைக் கீழே போட்டுவிட்டு அருகில் வந்தான்.
“என்னடா? எதுக்குக் கூப்பிட்டே?”
“பண்ணைப் பிள்ளை எமப் புளுவுங்க! இது விசயத்திலே அவரைக்கூட நீங்க நம்பறது...”
“சீ! போடா... முட்டாப் பயலே. ஒன்னை ஒண்னுங் கேக்கலை நான்! வேலைக்காரனா லட்சணமா வேலையைப் போய்ப் பாரு”
சின்னமாயனுக்குப் படீரென்று முகத்தில் அறைந்தாற் போல் இருந்தது, இந்தப் பதில் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு, திரும்பிப் போய்த் தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினான்.
“துப்புச் சொல்றானாம், துப்பு! அவரு கண்ணுக்குக் கண்ணாப் பழகற மனுஷன். ஏதோ கொஞ்சம் வழவழன்னு பேசுவாரு.. இந்த அற்பச் சந்தனக்கட்டையைத் திருடித்தானா பிழைக்கனும்?”
“அதுக்கு இல்லீங்க ரொம்ப நாளைக்கு முன்னே அவரு இப்படியெல்லாம்.”
“பேசாதே! உன் வேலையைப் பாரு” சின்ன மாயன் குனிந்த தலை நிமிராமல், விளக்குமாற்றை எடுத்து வழியைப் பெருக்க ஆரம்பித்துவிட்டான்.
அப்போது சின்னமாயனுடைய மனைவி வேலாயியிடம் பரசுராமின் மனைவி குடத்தைக் கொடுத்துத் தண்ணீருக்கு அனுப்பினாள். வேலாயி வீட்டுக் கொல்லைப் பக்கம் இருக்கிற கிணற்றடிக்குப் போகாமல், காம்பவுண்டைத் தாண்டி வெளியேறுவதைப் பார்த்த பரசுராம் அவளைக் கைதட்டி அழைத்தார்.கொல்லையில் கிணறு இருக்கிறபோது, அவள் ஏன் குடத்தை எடுத்துக்கொண்டு வெளியே போகிறாள் என்று சந்தேகம் தோன்றியது அவருக்கு.
“ஏஞ்சாமீ? கூப்பிட்டிங்களா?”அவர் கைதட்டி அழைத்த சத்தம் கேட்டு, வேலாயி குடத்தோடு வந்து நின்றாள்.
“குடத்தைத் துாக்கிக்கிட்டு எங்கே போறே நீ? கொல்லைக் கிணத்துலே தண்ணி இல்லையா?”
“அம்மா குளிக்கிறபோது புத்தம் புதுச்சோப்புக் கட்டியை முழுசா கெணத்துலே கை தவறிப் போட்டுட்டாங்க சோப்புக் கரைஞ்சு தண்ணி நாறுதுங்க.”
“அதுனாலே?.”
“நீ போயி, வேறெங்காச்சும் தண்ணி எடுத்துக்கிட்டு வான்னு அம்மா கொடத்தைக் கொடுத்தாங்க. சோப்புத் தண்ணியை வச்சுச் சமைக்க முடியுங்களா?”
“இங்கே பக்கத்துலே வேறே எங்கேயும் தண்ணீர் கிடையாதே? அருங்கோடையாச்சே! ஊற்றுத் தண்ணீர் கூட இருக்காதே?”