பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / மணக்கும் திருட்டு! 597


“என்னங்க செய்யிறது? அடிவாரத்திலே போயி, பண்ணையாரு இறவைக் கிணத்துலே இருந்துதான் கொண்டாரனும்.”

“அதுக்கு இங்கேருந்து ஒரு மைலுக்கு மேலே நடக்கணுமே?”

“நடந்துதான் ஆகணுஞ் சாமி வேறே வழியில்லையே?”

“சரி! சரி! போய்ச் சுருக்க எடுத்துக்கிட்டு வா. சமையல் சீக்கிரமா ஆகனும்.” பரசுராம் அவளைத் துரிதப்படுத்தி அனுப்பினார். அவள் போனபின் சின்னமாயனைக் கூப்பிட்டார். அவன், தான் செய்து கொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வந்தான்.

“சின்னமாயா! சாப்பாட்டுக்கு மேலே நாம ரெண்டு பேரும் சந்தனக் காட்டுக்குள்ளே போய் ‘ரிசர்வ் ஃபாரஸ்டி’லே ஒளிஞ்சிருக்கணும். நாளைக்கு விடிகிற நேரம் வரை அங்கேயிருந்து நகரக் கூடாது. துப்பாக்கிகளை எடுத்து ரவைகளை அடைச்சு வை. ராத்திரிக்குச் சாப்பாடு, கூஜாவிலே தண்ணி, எல்லாம் அங்கேயே கொண்டு போயிடனும்.இன்னிக்கு எப்படியும் உளவு தெரிஞ்சுக்காமே விடறதில்லை.”

“சரிங்க” என்றான் சின்னமாயன்.

“மத்தியானம் இரண்டு மணிக்குப் புறப்படலாமா? நீ என்ன நினைக்கிறே?”

“அப்படியே செய்வோமுங்க.”

“சரி போ! போய் அதற்கு ஆகவேண்டியதைக் கவனி.”

சின்னமாயன் துப்பாக்கியை எடுத்து ‘லோட்’ பண்ணுவதற்காக, ஆபீஸ் சாவியை வாங்கிக்கொண்டு போனான். பரசுராம் குளிக்கப் போனார். கிணற்றுத்தண்ணீர் ஒரு முழு ‘மைசூர் சாண்டல்’ சோப்பை முழுங்கிக் ‘கமகம’த்து கொண்டிருந்தது. ‘குளிப்பதற்குப் பரவாயில்லை’ என்று குளித்து முடித்தார்.

அவர் குளித்து ‘டிரஸ்’ பண்ணிக்கொண்டு, வெளிவாசல் பக்கம் வருவதற்கும், வேலாயி தண்ணீர்க் குடத்தோடு காம்பவுண்டுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

“இது என்னங்க எசமான்? அந்தப் பண்ணைப்பிள்ளை கிணத்துலே தங்கத்தையா பொதச்சு வச்சிருக்காரு ரொம்ப அநியாயமாயில்லே இருக்கு?”

“ஏன்? என்ன நடந்தது?”

“ஒரு கொடம் தண்ணி எடுத்துக்கிட்டாக் கிணறு வத்தியா போயிடும்? அவரோட வேளையாளு,“யாரா இருந்தாலும் கண்டிப்பா கிணத்துலே இறங்கவிடப்படாதுன் ஐயா உத்தரவு!” அப்படின்னு என்னை மறிச்சு நிறுத்திட்டான்.”

“நீ சொல்லப்படாதோ; நான் ஃபாரஸ்டு கார்டு ஐயா வீட்டுலே இருந்து வரேன்னு?”

“சொல்லிப் பார்த்தேனுங்களே! அப்படியும் அவன் முடியாதுன்னுட்டான். கடைசியிலே துணிஞ்சு ஒரு பொய் சொன்னேனுங்க காரியம் முடிஞ்சுட்டுது.”

“என்ன பொய் அது?” பரசுராம் சிரித்துக்கொண்டே கேட்டார்.