598★நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
—————————————————————————
“உங்க பண்ணையார் ஐயா, இப்போ அங்கேயேதான் எங்க எசமானோட உக்காந்து பேசிக்கிட்டிருக்கார். நம்ப கிணத்துல போய் எடுத்திட்டுவான்னு அவருதான் சொல்லி அனுப்பிச்சாரு நீ மாட்டேன்னா நேரே போயி அவரிட்ட சொல்லுவேன் என்றேன். அந்த ஆள் பயந்து போய், ‘அப்பிடியானா எடுத்துக் கிட்டு போ’ன்னுட்டான்!”
“சரி எப்படியானா என்ன? தண்ணீர் கொண்டு வந்திட்டே?”
“ஆமாங்க.”
“உள்ளே கொண்டுபோய்க் கொடு; சமையல் சீக்கிரமா ஆகனும்.”
வேலாயி தண்ணீர்க் குடத்தை உள்ளே கொண்டு போனாள்.சின்னமாயன் ஆபீஸ் சாவிக் கொத்தோடு திரும்பி வந்தான்.
“என்னடா?”
“எல்லாம் தயாரா வச்சிட்டேனுங்க.”
“சரி! நீ வேலாயியைக் கூட்டிட்டுப் போயி உன் சாப்பாட்டை முடிச்சுக்க. இராத்திரிப் பாட்டுக்கு ஏதாவது கட்டி வாங்கிக்க, சீக்கிரமா வா!”
“இதோ வந்திடறேனுங்க.” அவன் சாவியைக் கொடுத்துவிட்டுப் போனான். பரசுராம் இருந்த காம்பவுண்டுக்குள்ளேயேதான் அவன் குடிசையும் இருந்தது. சாவிக் கொத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வாசலில் குறுக்கும் நெடுக்குமாக உலாத்திக் கொண்டிருந்தார் பரசுராம்.
பதினொன்றரை மணி சுமாருக்குச் “சாப்பிட வரலாம்” என்று உள்ளேயிருந்து அழைப்புக் கொடுத்தாள் அவர் மனைவி. பரசுராம் உள்ளே போனார்.
இலை போட்டுக்கொண்டு உட்கார்ந்தார். சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்னால், நாலு மடக்குத் தண்ணிரைக் குடித்துக் கொள்வது அவர் வழக்கம். “அலமேலு, டம்ளரில் தண்ணீர் கொடு” என்றதும் அவர் மனைவி தண்ணீர் கொடுத்தாள்.பரசுராம் குடிப்பதற்காக அதைக் கையில் எடுத்தார். உதட்டருகே டம்ளரைக் கொண்டு போனவர், முகத்தைச் சுளித்தார்.
“ஏய்! நீ என்ன எங்கிட்ட விளையாடறியா? சோப்புத் தண்ணீயையா நான் குடிக்கனும்?”
“யார் விளையாடறது? நானா? நீங்களா? வேலாயி கொண்டு வந்தாளே, பண்ணையார் கிணத்துத் தண்ணீர்; அதைத்தான் டம்ளர்லே விட்டு வச்சேன்!”
“நிசம்மாவா?”
“அதிலே சந்தேகமா, என்ன? இதோ இந்தக் குடத்தையே பாருங்களேன்!” அவர் மனைவி குடத்தையே தூக்கிக் கொண்டு வந்து பக்கத்தில் வைத்துவிட்டாள்.