பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/603

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / மணக்கும் திருட்டு! 601


எதிர்பார்த்ததற்கு முன், பகல் ஒரு மணிக்கே போலீஸை லாரியோடு அழைத்துக் கொண்டு வந்துவிட்டான் சின்னமாயன். கடிதத்தில் பரசுராம் வேண்டிக் கொண்டிருந்தபடி கிணற்றுத் தண்ணீரை இறைப்பதற்காக ‘பாட்டரி செட்’,‘மோட்டார்-பம்ப்’ ஆகிய சாதனங்களோடு வந்திருந்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

பகல் மூன்று மணிக்குத்தான் கிணற்றிலிருந்த எல்லாத் தண்ணீரையும் வற்றச் செய்ய முடிந்தது. அதற்குள் பரசுராம் வீட்டிற்குப் போய்ச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வந்துவிட்டார்.

சுமார் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள, இருநூறு இராத்தலுக்கு மேற்பட்ட சந்தன மர முண்டுகள் கிணற்றுக்குள்ளிருந்து வெளியேற்றப்பட்டன. இதற்குள் கிணற்றை காவல் செய்வதற்கெனப் பண்ணைப்பிள்ளையால் நியமிக்கப்பட்டிருந்த காவலாள் வந்து சேர்ந்தான். அவனைப் பிடித்து அடித்து மிரட்டியதன் விளைவாக, அவன் சப் இன்ஸ்பெக்டரிடம் “எல்லாம் பண்ணை எசமான் வேலைதானுங்க” என்று உண்மையைச் சொல்லிவிட்டான்.

ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து மலைக்குப் போகும் வழியில் மொட்டைப் பத்தான் வெளியிலிருந்த பண்ணைப்பிள்ளையின் பங்களாவுக்குப் போய் அவரைக் கைது செய்தனர். அப்போது பரசுராமும் உடன் இருந்தார்.

“பிள்ளைவாள், சந்தனம் மணம் நிறைந்த பொருள்தான், திருடிச் சேர்த்தீர்கள். வாசனைப் பொருள்களைக் கள்ளக் கடத்தல் செய்து பணம் சேர்க்கும் முயற்சியினால், உங்களோடு கபடமின்றிப் பழகும் எனக்கே மோசம் செய்தீர்கள். திருடிய சந்தனம்தானே அது? இன்னும் தண்ணீரில் ஊறிய விசேஷத்தால் அபாரமாக மணக்கிறது. ஆனால், உங்களைத்தான் இப்படி நாறவைத்து விட்டது. இந்த நாற்றம் இலேசில் போகுமா?” பரசுராம் உருக்கமாகக் கூறினார். பிள்ளை பதில் பேசாமல் அவரை முறைத்துப் பார்த்தார். அலமேலு கிணற்றில் போட்ட சோப்பை வாழ்த்திக் கொண்டே வீடு திரும்பினார் பரசுராம்.

(1963-க்கு முன்)