பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/611

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81. நல்ல (பாம்பு) தீர்ப்பு

வீரநாராயணன் மனைவி குனிந்த தலை நிமிராது பஞ்சாயத்தாருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தாள். வட்ட வட்டமாக வெள்ளி மெட்டிகளை அணிந்திருந்த அவள் கால் விரல்கள், தரையைக் கீறிக் கொண்டிருந்தன. அவள் பெயர்தான் நீலம்மாள். நிறம் என்னவோ செந்தாழம் பூ நிறந்தான் கருகருவென்று வளர்ந்திருந்த நீண்ட அளக பாரத்தைக் கோணல் கொண்டையாக அள்ளி முடித்திருந்தாள். அப்படி முடிவது குல வழக்கம்.

“என்னம்மா? சும்மா நிற்கிறே! பஞ்சாயத்தார் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லு!”

நாட்டாண்மைக்காரத் தேவர் அவளை விரட்டினார். நீலம்மாள் பதில் சொல்லவில்லை. வழக்கில் வாதியான வேலப்பனும், பிரதிவாதியான வீரநாராயணனும் நாட்டாண்மைக்காரருக்கு இரண்டு புறத்திலும் நின்று கொண்டிருந்தார்கள்.

வீரநாராயணன் வாட்ட சாட்டமான ஆள். ஆறரை அடி உயரம், கம்பீரமான முகம். பெருந்தன்மை ஒளிரும் கண்கள். அந்த முகத்துக்குரியவரின் ஆண்மையை எடுத்துக் காட்டுவது போன்ற மீசை இறுகிப் பரந்த பாறை போன்ற மார்பு, வாளிப்பும் வண்மையும் நிறைந்த கை, கால்கள். வாதியாகிய வேலப்பனைப் பற்றித் தனியாக வருணிக்க வேண்டிய அவசியமே இல்லை. வீரநாராயணனுக்கு நேர் எதிரிடையான தோற்றமும், உயரமும் உடையவர் என்று சொன்னால் மட்டும் போதும்.

ஊர்ப் பஞ்சாயத்தாருக்கு முன்னால், இவர்கள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. வழக்கு நீலம்மாள் சம்பந்தமானதுதான். பஞ்சாயத்தார் வழக்கின் உண்மையை அறிவதற்காக அவள் சாட்சியத்தை விசாரித்தனர்.

ஆனால், அந்தப் பெண் வாயைத் திறந்து பதில் சொன்னால்தானே? பஞ்சாயத்தாரின் பொறுமையைத்தான் சோதித்துக் கொண்டிருந்தாள். நாழிகை ஆக ஆகப் பஞ்சாயத்தார்களுக்கு ஆத்திரம் வளர்ந்து கொண்டே போயிற்று.

“நீ என்னம்மா, பொண்ணு! இத்தனை பேரு பெரியவங்களாகக் கூடி விளையாடவா செய்கிறோம்? நியாயம் தெரியறத்துக்காகக் கேட்டா, ஊமை வேஷம் போடறியே! நீ சொன்னாத்தானே வழக்கு நடக்கும்?” ஆனால், அவள் வாயைத் திறக்கவேயில்லை.

“அவ ஏன் பேசுறா? மாமனும் ,மருமகளுமாகச் சேர்ந்துகிட்டு, என்னை உயிரோட சாக அடிக்கலாமின்னு திட்டமில்ல போடுறாங்க?” வீரநாராயணன் மீசை துடிதுடிக்க, கண்கள் சிவக்கப் பஞ்சாயத்தாரை நோக்கி ஆத்திரமாகப் பேசினான்.


நா.பா.1 - 39