பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/612

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

610நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


அந்தப் பேச்சைக் கேட்டு நீலம்மாள் முகத்தைச் சுளித்து அருவருப்போடு காதைப் பொத்திக் கொண்டாள். வேலப்பன் நின்று கொண்டிருந்த விதத்திலிருந்து அவன் மனநிலையை அளந்தறிவது கடிதாக இருந்தது. இடித்து வைத்த புளி மாதிரி, அடித்துவைத்த சிலை மாதிரி, ‘உம்’மென்று நின்று கொண்டிருந்தான் அவன். நேரம் கழிந்து கொண்டேயிருந்தது.

வழக்கு இதுதான்:-

வீரநாராயணன் மனைவி நீலம்மாள், தன் மாமன் வேலப்பனின் பணக்கார வாழ்வுக்கு ஆசைப்பட்டு, அவனோடு போய்விட்டாள். இந்த மாதிரிப் போவதும் வருவதும் அந்தச் சாதியில் முன் காலத்தில் பெரிய ஒழுக்கக்கேடு இல்லை; சகஜம்தான். ஆனால் முறைப்படி பஞ்சாயத்தாரிடம் சொல்லிப் பழைய கணவனைத் ‘தீர்த்துக் கட்டி’த் தள்ளிய பின்பே, புதியவனோடு போகவேண்டும். ‘தீர்த்துக் கட்டுதல்’ என்றே இந்த வழக்கத்துக்குப் பெயர். குல நடைமுறைப்படி ஆண், பெண் இரு சாராருக்கும் முறையாகத் ‘தீர்த்துக் கட்டி’க் கொள்வதற்கு உரிமை உண்டு. இப்போது அரசியல் சட்ட உரிமைப்படி, விவாகரத்து செய்துகொள்ளலாமல்லவா? இது மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

வேலப்பனுக்கு ஏராளமான நில புலன்களும், கையில் வளமான ரொக்கமும் இருந்தது. கட்டிய மனைவி இறந்துபோனதால், ஓரிரண்டு வருஷம் ஏகாங்கியாகக் காலந் தள்ளினான். நீலம்மாள் அவனுக்கு அக்காள் மகள். ஆனால் அவள் ஏற்கனவே வீரநாராயணனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள். ஆனாலும் ஆசை யாரைத்தான் விட்டது? வேலப்பன் நீலம்மாளிடம் பணத்தாசையைக் கிளப்பிவிட்டு, வலையை விரித்தான். வீரநாராயணனோடு உழைத்து, உழைத்து அரை வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்த நீலம்மாள், மெல்ல மெல்ல அவன் வலையில் விழுந்துவிட்டாள்.

முறைப்படி தீர்த்துக் கட்டிக் கொள்ளாமல் வீரநாராயணனின் மனைவியாக இருந்துகொண்டே, வேலப்பனோடு உறவு வைத்துக் கொண்டுவிட்டாள் நீலம்மாள். இது ஊர்முறைக்கும் குலமுறைக்கும் முரணானது. விஷயம் வீரநாராயணனுக்குத் தெரிந்துவிட்டது. அவனுக்கு ஏற்பட்ட கோப்த்தில் வேலப்பனையும், நீலம்மாளையும் அப்படியே கூண்டோடு கைலாசத்திற்கு அனுப்பியிருக்க முடியும். ஆனால் பஞ்சாயத்து முறைக்குக் கட்டுப்பட்டு, அவர்களிடம் புகார் செய்தான்.

வழக்கு விசாரணையில்தான், நீலம்மாள் பஞ்சாயத்தாருக்கு முன்னால் எதுவும் பேசாமல் மெளனம் சாதித்து விட்டாள். நீலம்மாள் உண்மையை ஒப்புக் கொண்டாலொழிய பஞ்சாயத்தாருக்குத் தீர்ப்பு வழங்க நியாயம் கிடைக்காது. வீரநாராயணனுடைய புகாரை உண்மையாகக் கொள்ளலாம். ஆனால் சரியான ருஜு இல்லை. வழக்காடும் இருவர் கூறுவதை மட்டும், சாட்சியமின்றி ஒப்புக்கொள்வது பஞ்சாயத்து வழக்கமில்லை. பஞ்சாயத்தார் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து மலைத்தனர். வேறு ஒரு வழியும் தோன்றவில்லை.