பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/613

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / நல்ல (பாம்பு) தீர்ப்பு 611


கடைசியில் தீராதபட்சம் ஒரே ஒரு வழி உண்டு. பெரும்பாலும் அந்த வழியை அமுல் நடத்துவதில்லை. அது மகாகோரமானதுகூட தலைமுறை தலைமுறையாக அவர்கள் பஞ்சாயத்து முறையில் அது ஒரு வழக்கமானாலும், பத்து வருஷம், இருபது வருஷங்களில் எப்போதாவது ஏகதேசத்தில்தான் அந்த மாதிரிப் பயங்கரம் நிகழும்.

ஒரு சாட்சியமும் கிடைக்காதபோது, தெய்வ சாட்சியை நாடுவது என்று ஒரு வழக்கம். தெய்வ சாட்சியென்றால் சாமானியமானதில்லை. சத்தியத்தோடு உயிரைப் பணயம் வைத்து விளையாடுவதைப் போலத்தான், அதுவும். அந்தச் சாதியாரிடம் இருந்த அந்த வழி வழி வந்த வழக்கத்தை நினைத்தாலே நமக்கெல்லாம் நடுக்கமெடுக்கும்!

ஊர் மாரியம்மன் கோயிலில், ஒடுங்கிய வாயை உடைய இரண்டு செப்புக் குடங்கள் இருக்கின்றன. பாம்பாட்டியைக் கூப்பிட்டு, இரண்டிலும் இரண்டு நல்ல பாம்புகளைப் பிடித்து உயிரோடு அடைப்பார்கள். வாதியும், பிரதிவாதியும் பஞ்சாயத்தாருக்கு முன்னால் மூன்று முறை குடங்களுக்குள் கையை நுழைக்க வேண்டும். பாம்பு கடிப்பதையும் கடிக்காததையும் பொறுத்து நியாயம் தீர்மானம் செய்யப்படும். குடத்தில் அடைபட்ட பாம்புகளால் விளையும் விளைவையே அவர்கள் தெய்வ சாட்சியாகக் கருதினார்கள். இது வழக்கம்தான். இருக்கிற நிலைமையைப் பார்த்தால் வழக்கு இந்தத் தெய்வ சாட்சி என்கிற பயங்கரமான எல்லையை வந்து அடையும் போலத்தான் தோன்றியது. ஊமை போல நின்ற நீலம்மாளே அப்படி ஒரு தவிர்க்க முடியாத அவசியத்தைத் தீராதபட்சமாக ஏற்படுத்திவிட்டாள். வேறு என்ன செய்வது? பஞ்சாயத்தார்கள் தங்கள் கடமையைச் செய்துதானே ஆகவேண்டும்?

இந்த முறையில் ஒரு வசதியும்கூட இருந்தது. கடைசி விநாடியில், குற்றம் செய்தவன் பாம்புக்குப் பயந்து குடத்துக்குள் கையை விடுவதற்கு முன்பே, நடுங்கி உண்மையை ஒப்புக்கொண்டு விடுவதும் உண்டு! அப்படி நேர்ந்தால் வழக்குக் கஷ்டமின்றி முடிந்துவிடும்.

ஞ்சாயத்தார் இரண்டு மூன்று நாள் அவகாசம் பொறுத்துப் பார்த்தார்கள். நீலம்மாள் எதையும் கூற மறுத்துவிட்டாள்.

மாரியம்மன் கோவில் பூசாரி செப்புக் குடங்களைக் கொண்டு வந்து பஞ்சாயத்தாருக்கு முன்னால் வைத்தான். நாட்டாண்மைக்காரர் பாம்பு பிடிக்கும் பிடாரனை அழைத்துக்குடங்களைக் கொடுத்து,“இரண்டிலும் சரிசமமானதாக, நல்ல பாம்புகளை அடைத்துக் கொண்டு வா” என்று அனுப்பினார்.

தெய்வ சாட்சியை அறியக் குடத்தில் கையை நுழைப்பதற்குப் பூரண சம்மத மென்று வேலப்பன், வீரநாராயணன் இருவருமே துணிந்து இணங்கி விட்டனர். ஆனால் இவ்வளவுக்கும் காரணமான நீலம்மாள் மட்டும் கடைசிவரை வாயைத் திறக்கவேயில்லை.