பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

614நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


‘விறுவிறு’ வென்று அவன் உடம்பு நீலம் பாரித்தது. உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால்வரை ‘வெடவெட’ வென்று நடுங்கின. கண் பஞ்சடைந்தது. கண்களில் நீர் மல்க வீரநாராயணனை நோக்கியும், அம்மன் சந்நிதியை நோக்கியும் தனியாக ஒரு கையைத் தூக்கி வணங்கினான் வேலப்பன். அவன் கை நுழைந்திருந்த செப்புக் குடத்திற்குள்ளிருந்து ‘படபட’வென்ற ஓசை வருவது மட்டும் நிற்கவில்லை.

இந்த நெருக்கடியான குழப்பம் நிறைந்த சந்தர்ப்பத்தில் பாம்புப் பிடாரன் கூட்டத்தை விலக்கிக்கொண்டுமண்டபத்திலிருந்து நழுவ முயன்று கொண்டிருப்பதை நாட்டாண்மைக்காரர் பார்த்து விட்டார்.

அவ்வளவுதான்! ஒரே தாவாகத் தாவி அவன் பிடரியில் கை வைத்து இரண்டு அறை கொடுத்தார். பாம்புப்பிடாரன், “ஆ, அப்பா அடிக்காதீங்க சாமீ” என்று அலறினான்.

“எங்கேடா ஓடறே? இரகசியத்தை எல்லாம் சொல்லிவிட்டு, அப்பறம் ஓடலாம்! இப்ப என்ன அவசரம்? வா இப்படி... முதல்லே குடத்திலே இருக்கிற பாம்புகளிடமிருந்து இந்தப் பய கையை வெளியே எடு. அப்புறம் பாம்புகளை வெளியேற்றிவிட்டு விவரத்தைப் பஞ்சாயத்தாருக்குச் சொல்லு.”

பிடாரன் திருட்டு விழி விழித்துக்கொண்டே நாட்டாண்மைக்காரரின் கட்டளைக்குப் பணிந்தான். கையை இறுக்கிக் கொண்டிருந்த பாம்புகள் விடுவதற்காக குடத்தின் வாயருகே குனிந்து, மகுடியை வாசித்தான். பிடாரன் நீண்டநேரம் மகுடி வாசித்த பிறகு வேலப்பனின் கைநெகிழ்ந்தது.விறைத்துப் போய் இரத்த ஒட்டம் நின்று நீலம் பரவியிருந்த அந்தக் கையை, மெல்ல வெளியே எடுத்ததும் வேலப்பன் தரையில் சாய்ந்தான்.

குடத்தை அடைத்துக்கொண்டிருந்த கை வெளியே வந்ததோ இல்லையோ? அதே வேகத்தில் ‘மூசு மூசென்று’ சீறிக்கொண்டு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவாறே சரிஜோடியான ஒரு நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் வெளியே பாய்ந்தன. சமாளிக்க முடியாத வேகத்தில் யாரும் காணக்கூடாத எக்கச் சக்கமான நிலையில் வெளி வந்த அந்தப் பாம்புகளைக் கண்டு பிடாரன் வெலவெலத்துப் போனான். அவனுக்கே ஒன்றும் புரியவில்லை. எப்படி அவை ஒன்று சேர்ந்தன என்பதை அனுமானிக்க நேரம் இல்லை; கை நடுங்க, உடல் பதற, வியர்க்க, விருவிருக்க மகுடியை ஊதினான். அந்த நிலையில் அவைகளைக் கட்டுப் படுத்துவதற்காக அவன் மகுடி ஊதவில்லை என்றால் அவனுடைய உயிருக்கே ஆபத்து. உடலும் உள்ளமும் தழுவி ‘நல்லதும்’ சாரையுமாக அனுராகச் சேர்க்கையில் ஈடுபட்டு மகிழும் அந்த நிலையில், மனிதர் பார்த்தால் ஓட ஓட விரட்டிக் கடிக்காமல் விடாது. மண்டபத்தில் கூடியிருந்த கூட்டம் பின்னுக்குத் தள்ளி விலகி நின்று கொண்டது. பஞ்சாயத்தார் ஒதுங்கிநின்றார்கள்.வீரநாராயணனும் ஒதுங்கி அவர்களோடுநின்றான்.வேலப்பனின் சடலமும் இரண்டு செப்புக் குடங்களும்தான் நடுவில் கிடந்தன. சடலத்தின் அருகே இரத்தம் பிரவாகிப்பதுபோலக் கிடந்தது செவ்வரளி மாலை.