பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/617

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / நல்ல (பாம்பு) தீர்ப்பு 611



பாம்புகள் நடுவே பின்னிப் பிணைந்து, தம்மை மறந்த இன்ப வெறியின் போதையில், ஆடித் திளைத்துக்கொண்டிருந்தன. பிடாரனுக்கு ஊதி ஊதி மூச்சே மகுடிக் குழாய் வழியே வெளியேறி, செத்து விடுவான்போல இருந்தது. பாவம்! அவன் உடம்பிலிருந்து வியர்வை ஆறாகப் பெருகி வடிந்து கொண்டிருந்தன. கன்னங்கள் இரண்டும் ஊதி ஊதி அப்பமாகக் கன்றிவிட்டன. கண்கள் நெருப்புத் துண்டுகளாகச் சிவந்துவிட்டன. பாம்புகள் பிரியவில்லை. ஆட்டத்தையும் நிறுத்தவில்லை.

“சரி! காசுக்காக நியாயதுரோகம் செய்த இந்தப் பயல் பிடாரனும் மூச்சுத் திணறிச் சாகத்தான் போகிறான். தப்புவதற்கு வேறு வழியில்லை” என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு விட்டார் நாட்டாண்மைக்காரர். அத்தனை பேரும் நெஞ்சு படபட என்று அடித்துக் கொள்ள, அந்தக் காட்சியை மிரண்ட நோக்கோடு பார்த்துக் கொண்டிருந்தனர். ‘பிடாரன் செத்தான்’ - என்றே தீர்மானிக்க யாரும் தயங்கவில்லை.

இந்தச் சமயத்தில் ஓர் ஆச்சரியம் நடந்தது! யார் செய்த புண்ணியமோ, அல்லது பிடாரனின் நல்ல காலமோ, அம்மன் கோவில் பூசாரி சூடத்தைக் கொளுத்தி சந்நிதி வாசற்படியில் வைத்தான். மகுடிக்கு அடங்காத பாம்புகள், சத்தியத்துக்காவது அடங்குகின்றனவா பார்ப்போம் என்று, சூடம் கொளுத்தி அம்மனைத் தியானித்தான். ஆடிக்கொண்டிருந்த பாம்புகள் வாயிற்படியில் எரிந்து கொண்டிருந்த சூடச் சுடரை வெறித்து நோக்கின. என்ன விந்தை தெய்வம் இல்லை என்கிறார்களே, ஒரு சிலர்! ஆடிக்கொண்டிருந்த பாம்புகள் தனித்தனியே பிரிந்தன. வாயிற்படியில் எரிந்து கொண்டிருந்த சுடரைக் கடந்து, அம்மன் சந்நிதிக்குள் சரேலென்று பாய்ந்தன. அவை மறுபடியும் வெளியே வந்து விடாமல் இருப்பதற்காகக் கதவை இழுத்து, இறுக்கிச் சாத்தி வெளிப்புறம் தாழ் போட்டான் பூசாரி. பிடாரன் மகுடியைக் கீழே போட்டுவிட்டு நிம்மதியாக மூச்சு விட்டான். யாரோ ஓடிப்போய் கோவில் தோட்டத்திலிருந்து அவனுக்கு இரண்டு இளநீர் வெட்டிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இளநீரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான் அவன்.

“ஐயா! சாமி, என்னை மன்னிச்சிடுங்க. இந்தப் பாவி வேலப்பன் பிணமாகக் கெடக்கானே, இவனோட காசுக்கு ஆசைப்பட்டு, என்னென்னமோ செஞ்சிட்டேனுங்க!”

“ஒரு செப்புக் குடத்திலே கழுத்தோரம் சுண்ணாம்பினாலே அடையாளம் பண்ணி, அதுலே மட்டும் சாரைப் பாம்பை அடைச்சிடு ஒனக்கு வேணும்கிறதைத் தரேன்னான். வவுத்துக் கொடுமைங்க; சரின்னிட்டேன். சுண்ணாம்பாலே அடையாளம் போட்ட குடத்திலே சாரையையும் இன்னொரு குடத்திலே ‘நல்லதை’யும் புடிச்சு அடைச்சேன். ஆனாப் பாருங்க... எனக்கும் தெரியாம இது நடந்திடுச்சு. நல்லதும் சாரையும் பக்கத்திலே இருந்தா ஒண்ணை ஒண்னு தழுவிப் பிணையாமப் போவாதுங்க. அது பாம்புக பளக்கமுங்க. எனக்குத் தெரியாமலே, நல்லதும் சாரை இருந்த குடத்திலே போய்ப் பிணைஞ்சிடுச்சிங்க.”