பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு மணிவிழாக் கதை

763

அன்பரசனின் வீட்டில் முன்புற அறையில் அமைதியாக ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பத்துப் பன்னிரண்டு பேர் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். வாசலில் வேங்கடநாதனின் தலை தெரிந்ததும், உட்கார்ந்திருந் தவர்களில் ஒருவர் ஓடோடி வந்து அவரை எதிர் கொண்டார்.

“என்ன கூட்டம் உள்ளே?” என்று உடனே கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியான குரலில் விசாரித்தார் வேங்கடநாதன்.

“அடடே! உங்களுக்குத் தெரியாதா, சார்? அடுத்த ஆண்டுடன் நம்முடைய தொண்டர் திலகம் அன்பரசனுக்கு அறுபது ஆண்டுகள் நிறைகின்றன. அவருடைய மணிவிழாவின் போது அறுபதினாயிரம் ரூபாய் பணமுடிப்பு அளிப்பதாக முடிவு செய்து பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் வாங்க…”

“அப்படியா? அன்பரசனுக்கே மணி விழாவா?” என்று பதில் சொல்ல முடியாமல் தலை சுற்றி மயக்கமாக வந்தது வெள்ளிவிழா எழுத்தாளருக்கு. மூர்ச்சை போட்டு விழுந்து விடாமல் வீடு திரும்பினார் வேங்கடநாதன். வந்தவுடன் முதல் வேலையாகத் தமது கணக்குப் புத்தகத்தை எடுத்து அதில் கீழ்வருமாறு எழுதினார் :

அன்பரசன் மணிவிழாவுக்காக நம் வகையில் நன்கொடை ரூ. 600 (செலவுக் கணக்கு).

மறுபடி அன்பரசன் மணிவிழாக் கணக்கில் அட்ஜஸ்ட் செய்வதாக முன் பணம் கேட்டு எப்போதாவது தனக்கு போன் செய்து விடக் கூடாதே என்ற பயம் நீண்ட நாள் வரை வேங்கடநாதனை நடுங்கச் செய்து கொண்டிருந்தது.


(சுதேசமித்ரன், தீபாவளி மலர், 1967)