பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

766

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

படித்ததும் திவான் பகதூருக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.

“ஸார்! உங்கக்கிட்டக் காண்பிக்கிறதுக்காக நான் எனக்கு வேணும்னு சொல்லிப் பையனிட்ட எழுதி வாங்கிக் கொண்டு வந்தேன். நீங்க இதை அவனிட்டக் கேட்க வேண்டாம். அப்புறம் என்னை மிஸ்டேக் பண்ணிப்பான். தயவு செய்து இதை மறந்துடுங்க.எல்லாம் படிப்படியாகச் சரியாயிடுவான்” என்றார் டியூஷன் வாத்தியார்.

கோபத்தோடு காகிதத்தைக் கிழித்துக் கசக்கி எறிந்தார் திவான் பகதூர்.

“பாட்டா இது? கண்றாவி ஒரு டிரேட் யூனியன் லீடர் மாதிரியின்னா பிதற்றி வச்சிருக்கான்” என்று கோபத்தோடு கூப்பாடு போட்டார் திவான் பகதூர்.

அன்று மாலையிலேயே வீட்டுக்குப் பத்திரிகைகள், புத்தகங்கள் சப்ளை செய்து வந்த கடைக்காரனை வரவழைத்து, “அவன் கேக்கிற புக்ஸை அனுப்பு. ஆனா அது என்ன என்ன புக்ஸ்னு எனக்கும் ஒரு லிஸ்ட் கொடுக்கணும் நீ. அவன் வேண்டாம்னாலும், பிஸினல் வீக்லி, காமர்ஸ் ரெவ்யூ, அட்வான்ஸ் எகனாமிக் ரீடர் அதெல்லாம் நிறுத்திடப்பிடாது. ஜாக்கிரதை!” என்று எச்சரித்து அனுப்பினார் திவான் பகதூர்,

அடுத்த வாரமே புத்தகக் கடைக்காரன் கிழவருக்கு ஒரு லிஸ்ட்டும், பில்லும் அனுப்பியிருந்தான். பேரப் பிள்ளையாண்டானுக்கு அவராகக் கொடுக்கச் சொல்லியிருந்த புத்தகங்களைத் தவிர அவனே கேட்டு விரும்பி வாங்கிக் கொண்ட புத்தகங்களின் பெயர்களைப் பார்த்த போது அவருக்கு எரிச்சல் மூண்டது.

‘வர்ஜின்ஸ் அன்ட் வைன் யார்ட்ஸ்’ என்ற கவிதைத் தொகுதி, பால்கிரேவ் தொகுத்த ‘கோல்டன் டிரெஷரி ஆஃப் இங்கிலீஷ் போயம்ஸ்’, பாரதியாரின் குயில் பாட்டு, பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’, ரவீந்திரரின் கீதாஞ்சலி என்று எல்லாப் புத்தகங்களுமே கவிதைகளாக இருந்தன. அவனாக விரும்பி வாங்கிய அந்தப் புத்தகங்களின் பட்டியலில், ஒரு புத்தகமாவது அவர் விரும்புகிறபடி இருந்திருந்தால் கூட மற்றவை பற்றி அவருக்கு அவன் மேல் கோபம் வந்திருக்காது.ஆனால் எல்லாமே அவர் விரும்பாத துறையாக இருக்கவேதான் கோபம் தாங்க முடியவில்லை. ‘இப்படிப் புத்தகங்களை அவன் கேட்டால் கொடுக்காதே’ என்று புத்தகக் கடைக்காரனிடம் கண்டிக்கவும், மனம் வரவில்லை. சிறு வயதிலிருந்து மடியில் வைத்துக் கொஞ்சி வளர்த்த பேரனை, முகம் சிணுங்கச் செய்யவும் பாசம் இடம் கொடுக்கவில்லை. ரங்கராஜன் என்று பெயர் வைத்திருந்தாலும், பிரியத்தைக் காட்டுவதற்காகச் செல்லப்பா, செல்லப்பா என்றுதான் அவனை வாய் நிறையக் கூப்பிடுவார் பெரியவர்.

வாத்தியாரைக் குறை சொல்லிப் பயனில்லை. அவருக்குக் கொடுத்த டியூஷன் பணத்துக்குச் செல்லப்பாவைப் பாஸ் செய்ய வைத்து விட்டார். அவனை வெளிநாட்டுக்கு அனுப்பியாக வேண்டும். லண்டன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸில் படித்துவிட்டுத் திரும்பும் போது பையன் மாறி வருகிறானா என்று பார்க்க ஆர்வமாக இருந்தார் பெரியவர். பணத்தின் செல்வாக்கும், தொழிலதிபராக இருப்பதன்