பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

770

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ராபர்ட்ஸனுக்கு ஒரு கடிதம் எழுதிப் பேரனைக் கவனிக்குமாறு வேண்டுவது அவர் வழக்கமாகியிருந்தது. ஒருமுறை ராபர்ட்ஸனே திவான் பகதூருக்கு விரிவான கடிதம் எழுதியிருந்தார் :-

“நீங்களும், நானும் நம்முடைய தலைமுறை இளைஞர்களைப் போலவே இன்றைய இளைஞர்களும் இருக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு.இன்றைய இளைஞர்கள் உருவாகிற விதமே பல விதங்களில் நமக்குப் புரிவதில்லை; புதிராகவும் இருக்கிறது. பெற்றோருக்கு அடங்கி அவர்கள் காட்டுகிற பாதையிலேயே போக வேண்டுமென்று ‘கன்ஸர்வேடிவ்’ ஆக அவர்கள் எண்ணுவதே இல்லை. உங்களுடைய பேரனுக்கு மிக நளினமாகவும், மென்மையாகவும் ஒரு மனம் வாய்த்திருக்கிறது. அப்படிப்பட்ட மனத்தை வியாபாரிக்கு உரிய கபடு, சூது எல்லாம் உடையதாக ஆக்கி விட நீங்கள் அவசரப்படுகிறீர்கள். எனக்கு உங்கள் மேல் கோபந்தான் வருகிறது. ஓர் அற்புதமான கவி கடுமையான வியாபாரியின் குடும்பத்தில் தவறிப் பிறந்து விட்டானே என்று உங்கள் பேரன் மேல் எனக்கு அனுதாபமாகவும் இருக்கிறது” என்று எழுதியிருந்தார். வழக்கம் போல் அதைப் படித்ததும் ராபர்ட்ஸன் மேல்தான் திவான் பகதூருக்குக் கோபம் வந்தது.

எப்படியோ பேரப் பிள்ளையாண்டான் லண்டனுக்குப் புறப்பட்டுப் போய் வருடம் ஒன்று ஓடி விட்டது. விடுமுறைகளில் ஊருக்கு வர விடாமல் ஐரோப்பாவில் ஒவ்வொரு நாடாகச் சுற்றிப் பார்த்து அவன் வியாபார அனுபவம் பெறும்படி ஏற்பாடு செய்திருந்தார் திவான் பகதூர். மொத்தம் இரண்டு வருடம் படிக்க வேண்டும், இரண்டு வருடமும் முடிந்து அவன் திரும்பும் போது தம்முடைய தொழில் பொறுப்புக்களில் சிலவற்றை அவனிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அவர் எண்ணியிருந்தார்.

அவன் போன ஐந்தாறு மாதங்களில் அவருடைய தொழில் நிறுவனங்களிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டன. ஸ்டிரைக், போனஸ் தகராறு, கோ ஸ்லோ, வேலை நிறுத்தம் என்றெல்லாம் குழப்பங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. வயது முதிர்ந்த காலத்தில் அவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு, சமாளிப்பதற்கு அவர் சிரமப்பட்டார். தளராத மனத் திடமும், தொழில்துறை நிபுணர்த்துவமும், விவகார ஞானமும் இருந்ததனால்தான், அந்த வயதிலும் அவரால் அவற்றை ஒழுங்கு செய்ய முடிந்தது. ஆயினும் அவருக்கு மன அமைதி இல்லை.இராத் தூக்கம் போயிற்று. ‘பிளட் பிரஷர்’ தொந்தரவு அதிகமாயிற்று.

வியாபாரத் தந்திரங்களிலும் தொழில் துறை நுணுக்கங்களிலும் வல்லாள கண்டர் என்று பெயரெடுத்த தமக்கே இப்படி என்றால், சூது வாது அறியாத பேரப் பிள்ளை செல்லப்பா எதிர் காலத்தில் இவற்றைக் கட்டிக் கொண்டு என்ன என்ன கஷ்டப்படப் போகிறானோ என்று சிந்தித்து அவர் மனம் குழம்பினார். நாட்டில் தொழில் நடத்துகிறவனுக்கும், தொழிலில் பணி புரிகிறவர்களுக்கும் இடையே சகஜமாக இருந்த நல்லுறவைக் குழப்பக்காரர்களும், அரசியல்வாதிகளும் சுயநலத்துக்காகப் படிப்படியாய்க் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டனர் என்பது அவருக்குப் பெரிய வேதனையாக இருந்தது.