பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112. மிகை

பார்வதிபுரம் எக்ஸ்டென்ஷன் காலனியில் சுமார் நானூறு, நானூற்றைம்பது வீடுகள் வரை இருக்கலாம். எல்லாக் காலனி வாசிகளுக்கும் அதன் தொடக்க காலத்தில் உள்ள சாலை வசதியின்மை, தண்ணீர் தட்டுப்பாடு போன்ற மனத் தாங்கல்கள் இங்கேயும் உண்டு. ஓர் இடத்தில் ஏதாவது அஸோஸியேஷன் உண்டாக வேண்டுமானால் ஒன்று அளவுக்கதிகமான குறைகள் இருக்க வேண்டும். அல்லது பரிபூரணமான வசதிகள் இருக்க வேண்டும். குறைகள் இருந்தால் ‘காலனி வெல்ஃபேர் அஸோஸியேஷன்’ என்றும் நிறைகள் இருந்தால் சங்கீத சபா அல்லது ரெக்ரியேஷன் கிளப் என்றும் ஏதாவது ஒரு சங்கம் தோன்றலாம். தோன்றுவதற்கு நியாயம் உண்டு.

இங்கேயும் பார்வதிபுரத்தில் இன்னும் நிறைவுகள் ஏற்படாததால், முதல் வகையைச் சேர்ந்த காலனி வாசிகளின் சங்கம் ஒன்று இருந்தது. அந்தச் சங்கத்தின் விசேஷக் கூட்டம் ஒன்றை உடனே வருகிற ஞாயிற்றுக்கிழமை காலையில் நடத்தியாக வேண்டும் என்று கமிட்டி உறுப்பினர்களில் ஏழு பேர் தமக்கு எழுதியிருப்பதாக அஸோஸியேஷன் காரியதரிசி வெங்கடராகவன் தலைவர் சாமிநாதனுக்குத் தகவல் கூறினார்.

“கூட்டம் நடத்தறதைப் பற்றி எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. ஆனால் கூட்டத்துக்கு அஜெண்டா என்ன?”

“இம்மாரல் டிராஃபிக் இன் காலனி”

“என்னது? என்னது? இனனொரு தரம் சொல்லேன்.”

வெங்கடராகவன் அஜெண்டாவின் ஒரே அயிட்டத்தை இன்னொரு முறை சொன்னான்.

“வெறும் ‘டிராஃபிக்’குக்கே இங்கே ரோடுகள் சரியாயில்லே?. நீ சொல்ற ‘டிராஃபிக்’ வேற இருக்கா?”

“இருக்கும் போலத்தான் தோணறது சார்.”

“யார் சொன்னா அப்பிடி?”

“கூட்டத்தைக் கால் ஃபார் பண்ணி எழுதியிருக்கிற ஏழு பேரும் நிரூபிக்கத் தயாராயிருக்கா சார்.”

“எந்தத் தெருவிலே இருக்காம் அது?”