பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இரண்டாம் தொகுதி ஒரு கவி இந்த வழியாகத்தான் நடந்து செல்கிறான்

833

பார்வையில் படும்படி கோலத்தின் மேல் வைத்தாள். அவனும் சிரித்தபடியே குனிந்து, கவனமாக அதை எடுத்துக் கொண்டு போனான்.

அதற்கு அடுத்த நாள் காலையில் மீண்டும் அவன் ஒரு துண்டுத் தாளில் ‘ஒரு கவி நடந்து போகும் தெருவைச் சாக்கடையும் சேறும் சகதியும் அலங்கரிப்பதை விட அதிகமாக நீ அலங்கரித்து விட முடியும் என்றுகூட நினைக்கிறாயா?’ என்று எழுதிப் போட்டு விட்டுப் போனான். இதற்கு என்ன பதில் எழுதுவதென்று அவளுக்குத் தெரியாததால், அவள் ஒன்றும் எழுதவில்லை. மறுநாள் காலை அவளுடைய கோலத்தையே பார்த்துக் கொண்டு தெருவில் நடந்து வந்து அவன் ஏமாந்து போனான்.

அதற்கு அடுத்த நாளன்று அவன் அவளுக்காக எழுதிப் போட்ட துண்டுத் தாளில், ‘தெருவில் எழுத நேரம் இருக்கிறதே; எனக்கு எழுத நேரம் இல்லையா, மனம் இல்லையா?’ என்று இருந்தது.

“தெருவில் எழுதுவதே உங்களுக்காகத்தான். ஒரு இளங்கவி நடந்து போகும் பாதை இது! இதைச் சூனியமாக விட்டுவிடக் கூடாதென்றுதான் நான் கோலமே போடுகிறேன்” என்று அதற்குப் பதில் எழுதி மடித்து அவனை அடையச் செய்தாள் அவள.

நாலைந்து நாள் கழித்து ஒரு நாள் இருந்தாற் போலிருந்து வீட்டுக் கூடத்தில் அப்பாவும் அவனும் பேசிக் கொள்ளும் குரலைக் கேட்டு எட்டிப் பார்த்தாள் அவள். அவள் பார்க்கும் போது அப்பா அவனுக்கு ஏதோ அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். “இதோ பார் ரகு! நீ படிப்பைப் பாதியிலே நிறுத்தினது எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. கனவுலகத்திலே வாழ முடியாது. நீ இன்னும் கொஞ்சம் ‘ப்ராக்டிகலா’ இருக்கணும். இந்தக் கவிகள் மகாநாடு, இலக்கியக் கூட்டம், இதையெல்லாம் வேற யாராவது வசதியா இருக்கறவங்ககிட்டே விட்டுடு”

“வசதியாயிருக்கறவங்க இதையெல்லாம் எங்கே மாமா கவனிக்கிறாங்க? உங்க மாதிரி என் மாதிரி இந்தச் சாக்கடைச் சந்திலே குடியிருக்கிற மத்தியதர வர்க்கம்தான் வீட்டுக் கவலைகளோடு இந்தக் கவலையையும் சேர்த்துப்பட வேண்டியிருக்கு”

“நல்லாப் பேசறே நீ! இத்தனை சாமர்த்தியமும் தொடர்ந்து மேலே படிக்கிறதுக்குப் பயன்பட்டிருந்தால், நான் சந்தோஷப்படுவேன். உனக்குப் படிக்கணுங்கற ஆசை ஏன் இல்லே? இப்ப என் பெண் ராஜி இருக்கா, அவ படிப்பை நான் எஸ்.எஸ்.எல்.ஸி.யோட நிறுத்திட்டேன். ஏன்னா என்னிக்கிருந்தாலும் அவள் கல்யாணமாகி இன்னொருத்தன் வீட்டுக்குப் போகப் போறவள். நீ அப்பிடி இல்லை பாரு? உங்க அப்பா இன்னும் ரெண்டு வருஷத்திலே ரிடையர் ஆயிடுவார். அதுக்குள்ளே நீ ஒரு வேலைக்குப் போகலேன்னா உங்க குடும்பம் கஷ்டப்படும்.”

“உலகமே ஒரு பெரிய கஷ்ட ஜீவனக் குடும்பம்தான் மாமா! அதை நினைத்துக் கொண்டே நாம் ‘வீப்பிங் பிலாஸபி’ அதாவது அழுகுணிச் சித்தர் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.”


நா.பா. II - 14