பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



834

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

இந்த இடத்தில் தன் அறையிலிருந்தபடியே அவனுக்காக ஒரு கரகோஷமே செய்யலாம் போலிருந்தது ராஜிக்கு அவன் பயப்படாமல் எதிர்த்துப் பேசினான். வயது. மூப்பு என்று தயங்காமல் மனத்தில் பட்டதை எல்லாம் பளிச் பளிச்சென்று சொல்லி அப்பாவை மேலே பேசவொட்டாமல் திணற அடித்துக் கொண்டிருந்தான் அந்தக் கோபக்கார இளங்கவிஞன்.

அவன் பேச்சைக் கேட்கக் கேட்க ராஜிக்குக் கூடத் துணிச்சல் வந்தது. மெதுவாகத் தன் அறையிலிருந்து நழுவிச் சமையலறைக்குப் போய், “ஒரு காபி கலந்து குடும்மா! இந்த அப்பாவுக்குக் கொஞ்சம் கூட இங்கிதமே தெரியலை. இத்தனை நாழியாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே, ‘ஒரு காப்பி சாப்பிடேன்’ என்று சொல்கிறாரா, பாரேன்!” என்று அம்மாவிடம் சொல்லிக் காபி கலந்து வாங்கிக் கொண்டு போய் அப்பாவுக்கும், அவனுக்கும் நடுவிலிருந்த ஸ்டூலில் வைத்து விட்டு அவனை நோக்கி இரகசியமாக அவனுக்கும் மட்டும் புரியும் அர்த்தத்தில், ‘இந்த வீட்டில் உன்னை மதிக்கவும் உனக்காக உருகவும் உனக்காக ஏங்கவும்கூட ஒரு ஜீவன் இருக்கிறது’ என்று புன்னகை மூலம் புலப்படுத்தி விட்டுத் திரும்பினாள் ராஜி.

மறுநாள் அதிகாலையில் அவள் எதிர்பார்த்தது போலவே அவளுடைய கோலத்தின் மேல் அவன் மடித்துப் போட்ட தாள் விழுந்தது.“நாளைய உலகத்துக்குக் காப்பியம் பாடப் போகும் எனக்குக் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்ததற்கு நன்றி. உன் கையால் காபி சாப்பிட்ட அதிர்ஷ்டமோ என்னவோ, நேற்று என்னுடைய பாடல் ஒன்று ஒரு படத் தயாரிப்பாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அடுத்த வாரம் ரேடியோவில் என் கவிதைகள் சிலவற்றை நானே சொல்லி விளக்கப் போகிறேன். ஞாயிறு இரவு எட்டேகால் மணிக்கு அதை நீ கேட்கலாம். கேட்க வேண்டும். கேட்டால் நான் சந்தோஷப்படுவேன்.”

அன்றிலிருந்து அடுத்த வாரம் என்பது ஞாயிற்றுக் கிழமையாகவே அவளுக்குள் மாறியிருந்தது. அடுத்த வாரத்திலிருந்து ஞாயிற்றுக் கிழமையைத் தவிர மற்ற எல்லாக் கிழமைகளுமே தொலைந்து தவிர்ந்து போய் விடக் கூடாதா என்று கூட அவள் எண்ணினாள். அந்த ஒரு வாரத்துக்கு மட்டும் ஞாயிற்றுக் கிழமை ஒன்றே கிழமையாயிருக்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு.

அந்த ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. ரேடியோ அடியிலேயே பழி கிடந்து அந்தக் கவிதைகளைக் கேட்டாள் அவள். அதில் ஒரு கவிதை தெருவில் கோலமிடும் பெண்ணைப் பற்றி இருந்தது. தன்னை நினைத்து அவன் அதை எழுதியிருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அதில் ஒரு பாடலில் பல வரிகள் திரும்பத் திரும்பச் சொல்லி அவளுக்கு மனப்பாடமே ஆகிவிட்டன.

“ஞாலம் எழும் தனி வேளையிலே ஒரு
ஞாயிறு கிழக்கினில் முளைக்கையிலே
காலம்எனும் தேர்ச் சாலையிலே ஒரு
காலை புலர்ந்து புவி மலர்கையிலே