பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பெண்ணுக்கு மரியாதை

849

முடியவில்லை. தன்னுடைய அடக்கத்தையும் மரியாதையையும் அவள் சரியாக எடுத்துக் கொள்வாளா, அல்லது தன்னை பயந்தாங்கொள்ளி என்று எடுத்துக் கொள்வாளா என்பதாக அவனுள்ளே அப்போது ஒரு சிந்தனை ஒடியது.

வெறும் பயம் மட்டும் மரியாதையாகி விடாது; உலகில் எல்லா இடங்களிலும் பயபக்தியினாலேயே மரியாதை செலுத்தி விட முடியாது; பயமின்றி மரியாதை செலுத்தும் இடங்களும் உண்டு என்று அவன் மனத்தில் இன்னொரு குரல் அவனை இடித்துக் காட்டவும் செய்தது. தான் இயலாமையினால் பயப்படுகிறோமே ஒழிய மரியாதையால் பயப்படவில்லை என்று அவன் மனமே அவனை இடித்துக் காட்டவும் தவறவில்லை. கூட்ட முடிவில் சபாவின் மூத்த உறுப்பினர்களும், நண்பர்களும் கூட்டுச் செயலாளராக அவன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதற்காக அவனைப் பாராட்டினர். அப்படி அவர்கள் எல்லாரும் தன்னை வந்து பாராட்டும்போது பேபியும் அருகே நின்று கொண்டிருந்தததனால் தன் அருகே அவள் சேர்ந்து நிற்பதைப் பற்றி அவர்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டு போவார்களோ, என்ன பேசிக் கொண்டு போவார்களோ என்று அவன் மனம் தயங்கியது.

‘கணபதி சாஸ்திரியின் பேத்தியும் சுந்தரேசனும் ரொம்ப நெருக்கம் போலிருக்கிறது’ என்று யாராவது பேசிக் கொண்டு போனால் அது எவ்வளவு மரியாதைக் குறைவாக இருக்கும் என்று எண்ணிப் பயந்தான் அவன்.

‘சரிதான்! கணபதி சாஸ்திரி இவனை இதற்காகத்தான் இங்கே கூட்டுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் போலிருக்கிறது’ என்று யாரோ பேசிக் கொண்டு போவது போல் அப்போதே ஒரு பிரமை அடைந்து விட்டான் சுந்தரேசன். உடனே அவள் பக்கத்தில் நிற்கும் அந்த இடத்திலிருந்து நகர விரும்பி, மெல்ல வெளிப்பக்கம் நகர்ந்தான் அவன். அப்படிப் போகும் போது அவளிடம் சொல்லிக் கொள்ள நினைத்து ஒர் இளம் பெண்ணிடம் ஒர் இளைஞன் சொல்லி விடைபெற்றுக் கொள்வது போன்ற உற்சாகமோ, உவகையோ இல்லாமல், பயபக்தியோடு விலகி நாலடி தள்ளி, ஒரு வி.ஐ.பி.க்கு வணக்கம் செலுத்துவது போல் பேபிக்கு வணக்கம் செலுத்தினான் சுந்தரேசன்.

பேபி அவன் எதிர்பார்த்தது போல் பதிலுக்கு அவனை வணங்காதது அதிர்ச்சியளிப்பதாயிருந்தது. அவன் விலகி நின்று கைகூப்பியதற்குப் பதிலாக அலட்சியமான புன்னகை ஒன்றை இதழ்களில் சிந்தினாள் அவள். சபாவுக்குள் வந்ததும், இவன் நம்ம சபேசனோட சன் என்று சாஸ்திரி அவளுக்குத் தன்னை அறிமுகப்படுத்திய போது கன்னங்கள் கனிய நாணிச் சிரித்து, இங்கிதமாக கை கூப்பிய அவள்தான் இப்படி அலட்சியமாகச் சிரித்துக் கொண்டு நிற்கிறாள் என்பதை இப்போது அவன் நம்பவே முடியாமலிருந்தது.

தான் இவ்வளவு கவனமாக மறந்து விடாமல் செலுத்திய மரியாதைக்குப் பதில் மரியாதை கூடச் செலுத்தாமல் அவள் ஏன் இப்படி அலட்சியமாக மரம் போல் நிமிர்ந்து நின்று சிரிக்கிறாள் என்பது புரியாமல் அவன் குழம்பினான்.


நா.பா. II – 15