பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



854

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

இருவரும் பக்கத்தில் இருந்த ஒரு ஸ்டாலில் கோல்ட் ஸ்பாட் சாப்பிட்டார்கள். இப்போது அவள் அவனிடம் நிமிர்ந்து பார்த்துப் பேசவே நாணப்பட்டாள். கூச்சப்பட்டாள். ஆயிரம் தொழிலாளர் பிரச்சினையைச் சமாளித்ததை விட இன்று அவனுக்கு இது பெரிய வெற்றி.

கடற்கரை மணலில் அமர்ந்திருந்த போதும் கீழே பார்த்து மணலைக் கீறிக் கோடு போட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

"பேபீ! உன்னை ஒண்னு கேக்கணும்...”

"கேளுங்கோ.”

"அன்னிக்கி ஃபோன்லே கோபமாப்பேசினியே, அப்ப, ‘ஒரு பெண்ணுக்கு எப்படி மரியாதை செய்யறதுன்னு நீங்க இனிமேல் தான் படிச்சுக்கணும்’னியே இன்னிக்கு நான் அதை ரொம்பச் சரியாப் படிச்சிண்டுட்டேன்னு நினைக்கிறேன், சரிதானே?”

அவள் பதில் சொல்லவும் இல்லை; தலை நிமிரவும் இல்லை. இன்பக் கிளுகிளுப்புடன் கூடிய சிரிப்பு மட்டும் அவளிடமிருந்து ஒலித்தது. அந்தச் சிரிப்பே அவன் சொல்வது சரிதான் என்று ஒப்புக் கொள்வதாக இருந்தது.

"அம்பிகாபதி அமராவதிக்கும் பில்ஹணன் தன்னைக் காதலித்த ராஜகுமாரிக்கும், துஷ்யந்தன் கண்வருடைய மகளுக்கும் செய்த மரியாதை இதுதானே?”

இதைக் கேட்டு அவள் முகம் கனிந்து சிவப்பதை அவன் தலை தாழ்த்திப் பார்க்கிறான். பதில் சொல்லவும் நாணி ஒடுங்கி விட்டாள் அவள் என்பது அவனுக்குப் புரிகிறது; நன்றாகப் புரிகிறது.

‘தேர்யூ ஆர்!’

அவன் மனம் கு தூகலத்தால் துள்ளுகிறது. ஓர் இளம் அரபிக் குதிரையைப் பழக்கி வசப்படுத்தி விட்ட ஆண்மைப் பெருமிதத்தால் பூரிக்கிறது.

திரும்புவதற்காக இருவரும் காரருகே வரும் போது கொழுகொம்பைச் சார்ந்த கொடி போல் அவனருகே துவண்டு தளர்ந்து துடியிடை அசைய நடந்தாள் அவள். பழைய குதிரை நடை இல்லை இப்போது.

காரில் ஏறுமுன்,

“உங்களைத்தானே! பீச்சுக்கு வந்தது தாத்தாவுக்குத் தெரிய வேண்டாம்” என்று மெல்லிய குரலில் பயத்தோடு அவள் கூறிய போது, “ஏன் பயந்து சாகிறாய், பேபி!” என்று அவன் ஆண் சிங்கமாகப் பதில் சொன்னான். அவள் அதை எதிர்த்துச் சொல்லவில்லை. அவன் பயந்த வரை முற்றிலும் அவனை மதிக்காமல் இருந்து விட்டு, அவனே துணிந்த பின் அவள் அவனுக்குப் பயந்து மரியாதை செய்தாள்.

வீட்டில் அவளை இறக்கிவிட்ட போது அவன், “மறந்துடாதே, ராத்திரி போன் பண்ணு” என்று கூறியவுடன், “உஷ்! மெதுவாச் சொன்னால் என்ன?” என்று