பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117. ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது

“இளைய ராஜாவை யாரோ பார்க்கணும்னு வந்திருக்காங்க.” குரலைக் கேட்டு ஆத்திரத்தோடு திரும்பிய ரகுநாத பாண்டிய ராஜ பூபதி என்ற ஆர்.பி.பூபதி.

“இந்தா மருதமுத்து உனக்கு எத்தினி வாட்டி சொல்லியிருக்கேன்,’இளைய ராஜா’ அந்தராஜா இந்த ராஜா எல்லாம் கூடாது.சும்மா 'ஐயா’னு கூப்பிட்டாப் போதும்னு.” என்று வேலைக்காரனை இரைந்தான். அவனுடைய முகத்தில் கடுங்கோபம் தெரிந்தது. வேலைக்காரன் விஸிட்டிங் கார்டு ஒன்றை நீட்டிக் கொண்டே கூறினான். “வளமுறையை எப்பிடி விட முடியும் இளையராஜா?”

“பார்த்தியா, பார்த்தியா, மறுபடியும் இளையராஜா வா! அதானே வேணாம்னு இவ்வளவு நேரமாத் தொண்டை தண்ணி வற்றினேன். ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எழுபத்தி மூணாம் வருசத்திலே. இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்; நம்மை நாமே ஏமாத்திகலாம்னா இப்பிடி எல்லாம் கூப்பிட்டுச் சந்தோஷப்பட்டுக்கலாம்.”

“அப்படியில்லீங்க - வந்து?”

“வந்தாவது, போயாவது, இந்தக் கோட்டை மதில் சுவருங்க இருக்கே, இதை வெளி உலகமே நம்ம கண்ணுக்குத் தெரியாதபடி அந்தக் காலத்திலே ரொம்ப உயரமாக கட்டிப்பிட்டாங்க. அதான் உங்களுக்கெல்லாம் வெளி உலகமே தெரியலே. காலம் ஓடிக்கிட்டு இருக்குங்கிறதும் தெரியலே. சொப்பனத்துலே வாழுங்க. பீமநாதபுரம் சமஸ்தானம் அஸ்தமிச்சு இருபத்தியாறு வருசம் ஆகப் போகுது. அது அஸ்தமிச்சுப் போச்சுங்கிறது இன்னும் வெளிப்புறத்து மதில்களைத் தாண்டி இங்கே உள்ளே தெரியலே. அதுதான் கோளாறு. முதல்லே இந்த மதில் சுவர்களை இடிச்சுத் தள்ளணும்.”

“வந்திருக்கிறவரு காத்துக்கிட்டிருக்கிறாரு.”

“வரச் சொல்லு.”

மிடுக்காக உடையணிந்த ஒரு நடுத்தர வயது மனிதர் வந்தார். அங்கே கிடந்த பழைய காலத்து அலங்கார நாற்காலிகளில் ஒன்றைக் காட்டி அவரை உட்காரச் சொன்னான் பூபதி.

“ஹைனெஸ்ஸை இவ்வளவு சீக்கிரமாச் சந்திக்கிற பாக்கியம் கிடைக்கும்னு இந்த ஏழை நினைக்கலே” என்று பவ்யமாக வணங்கிய அந்த நடுத்தர வயது மனிதர், நாலைந்து யுவர் எக்ஸெலன்ஸி எல்லாம் போட்டுப் பேசவே எரிச்சலடைந்தான் பூபதி.