பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஓர் அரண்மணை ஏலத்துக்கு வருகிறது

857


“ஐ யாம் பூபதி. ப்ளீஸ் ஸே மிஸ்டர் பூபதி. தட் இஸ் எனஃப்” என்று அவரை மடக்கினான்; எரிச்சலோடு இரைந்தான்.

“நான் ஒரு வாரத்துக்கு முன் பெரிய ராஜாவை பெங்களுர் ரேஸில் சந்திச்சுப் பேசற பாக்கியம் கிடைச்கது.”

“அதாவது எங்க ஃபாதரை பெங்களுர் ரேஸ்லே பார்த்தேன்கிறீங்க. பெங்களூர் ரேஸ்லே மட்டும் என்ன, எங்கே ரேஸ் நடந்தாலும், அவரைப் பார்க்கலாம்.”

“நோ நோ. அப்படிச் சொல்லப்படாது, பெரிய ராஜா.”

“மிஸ்டர். உங்க பேரென்ன? சாமிநாதனா..? சாமிநாதன்! இதா பாருங்க சுற்றி வளைக்காமே வந்த காரியத்தை ஸிம்பிளா சொல்லுங்க. இப்ப இந்த இடம் சமஸ்தானமும் இல்லை. நான் சின்ன ராஜாவும் இல்லே. எங்க அப்பா பெரிய ராஜாவும் இல்லே. எல்லாரையும் போல நாங்களும் ஜனங்கதான். இந்த மதிற் சுவர், கோட்டை, நந்தவனம் இதை எல்லாம் விட்டு விட்டு, வேற வீடு புதுசாக் கட்ட வசதி இல்லாததாலேதான், இன்னும் நாங்க இதிலேயே குடி இருக்கோம். இதிலேயே தொடர்ந்து இருக்கறதுனாலே நாங்க ராஜாக்கள் ஆயிட மாட்டோம். நாங்க ராஜாவா இருந்ததை நாங்களே மறக்க ஆசைப்படற்றப்போ நீங்க அதை நினைப்பு மூட்டி விடறீங்களே, அதிலே உங்களுக்கு என்ன சந்தோஷம்?”

“தப்பா ஏதாவது பேசியிருந்தால், இளைய ராஜா இந்த ஏழையை மன்னிக்கணும்.”

“இன்னமும் தப்பாத்தான் பேசிக் கிட்டிருக்கீங்க மிஸ்டர் சாமிநாதன்! போகட்டும் வந்த வேலையையாவது சிம்பிளா சொல்லுங்க.”

“அந்த மோகினி பெயிண்ட்டிங்க்ஸ் விஷயமா பெரிய ராஜாகிட்டப் பேசினேன்.”

“என்ன பேசினீங்க?”

“அந்த பிரஞ்சுக்காரன் இந்த சீரிஸ் முழுவதையும் பதினையாயிரம் ரூபாய்க்குக் கேட்கிறான்.”

“மிஸ்டர் சாமிநாதன்! உங்களுக்கு நான் சில உண்மைகளைச் சொல்லுகிறேன். எங்க ஃபாதரோடு நீங்க ரொம்ப நாளாப் பழகறிங்க. அதனாலே அவரோட எல்லா ‘வீக்னஸ்ஸும்’ உங்களுக்குத் தெரியும்.அவருடைய புத்திர பாக்கியங்களிலே என்னைத் தவிர மீதி மூணு பேர் காலேஜிலே படிச்சிக்கிட்டிருக்காங்க. ஒவ்வொருத்தனுக்கும் மாசம் பிறந்தா எழுநூறு ரூபாய்க்கு பேங்க் டிராஃப்ட் எடுத்து மெட்ராஸுக்கு அனுப்ப வேண்டியிருக்கு. சாதாரணமா மத்தக் குடியானவங்க வீட்டுப் பையன் இதே படிப்பை முந்நூறு ரூபாய்க்கும் குறைவாச் செலவழித்துப் படித்து விடுவான். ‘பீமநாதபுரம் யுவராஜா’ என்கிற பொய்யான பிரமையிலே என் தம்பிகள் அதிகமாகச் செலவழிக்கிறாங்க. அரண்மனைங்கிற இந்தப் பெரிய மாளிகையிலே கலியாணங் கட்டிக் கொடுக்க வேண்டிய பெண்கள் இன்னும் ஒரு டஜன் எண்ணிக்கைக்குச்ச ரியா இருக்காங்க.