பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

858

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


ஃபாதரோ பிரிட்டிஷ்காரன் காலத்தில் இருந்த மாதிரியே இன்னும் ஜபர்தஸ்தா இருக்காரு. அவரோடு பழகறவங்களும் அப்படித்தான் இருக்காங்க. ஃபாதரோட கிளப் மெம்பர்ஷிப் பில்களே மாசம் மூவாயிர ரூபாய்க்கு மேலே வந்திடுது. ஸ்பென்சர் சுருட்டு, ஸ்காட்ச் விஸ்கி, ரேஸ், சீட்டாட்டம் எதையும் அவர் விட மாட்டேங்கிறாரு. வீட்டு வரவு செலவு, நிர்வாகம், எல்லாம் என் தலையிலே விழுந்திருக்கு. மாசா மாசம் பணக் கஷ்டம் தாங்க முடியலே. எதை எதையோ விற்று எப்படி எப்படியோ சமாளிக்கிறேன். எங்கப்பாவிலேருந்து இந்த மாளிகையிலே ராணிகள் என்ற பேரிலும், ராஜகுமாரிகள் என்ற பேரிலும், சின்ன ராஜாக்கள், சின்ன ராணிகள் என்ற பேரிலும் அடைந்து கிடக்கிற யாருக்கும் இங்கே உள்ள அசல் வறுமைகள், அசல் சிரமங்கள் எதுவுமே தெரியாது. யாருமே ரியாலிட்டியை ஃபேஸ் பண்ண எப்பவுமே தயாராயில்லை. வாழ்க்கை சிரமங்கள் தெரியாமல் எங்க வீட்டிலே ஒவ்வொருத்தரும் பீமநாதபுரம் ராஜா, பீமநாதபுரம் ராணி, பீமநாதபுரம் சின்னராணின்னு கூப்பிட்டுக் கொண்டும் கூப்பிடச் சொல்லியும், எழுதியும் எழுதச் சொல்லியும் போலியாப் பெருமைப்பட்டிக்கிட்டிருக்காங்க. இங்கேருந்து மெட்ராசுக்கு முதல் வகுப்பு ரெயில் டிக்கெட் வாங்கறப்பக் கூட ரிஸர்வேஸன் சார்ட்லே இடச் சுருக்கத்துக்காக வி.ஆர்.பி.பூபதின்னு போட்டா எங்கப்பா கோபிக்கிறாரு. ‘ராஜா விஜய ராஜேந்திர பீமநாத பூபதி’ன்னு முழுப் பெயரும் போடாட்டி அந்த ரெயில்லே ஏறிப் போக மாட்டேங்கறாரு ஆனா அந்த ரயில் டிக்கெட்டை நான் எப்படி வாங்கறேன், எதை விற்று வாங்கறேன்னு தெரிஞ்சா அவருக்குத் தன் நிலைமை புரியும்.

நவராத்திரி சதஸ், மன்னர் பிறந்த நாள், அன்ன தானம் என்று பழைய நாளில் ஆயிரம் இரண்டாயிரம்பேருக்குச் சோறு வடிக்க, சாம்பார் வைக்க என்று ஏராளமான அண்டாக்கள், குண்டாக்கள், தூக்கு வாளிகள், பாத்திரங்கள் எல்லாம் இங்கே ஒரு கட்டிடம் நிறைய அடைஞ்சு கிடக்குது. இந்த வீட்டின் மாதாந்திர வரவு-செலவு இப்போது எல்லாம் அப்படிப் பழைய பண்டங்களை விற்றுத்தான் நடக்குது. கீழவெளி வீதியிலே உள்ள சோமநாத நாடார் பாத்திரக் கடையிலே பின்பக்கமாகப் போய் நீங்க நுழைஞ்சா அங்கே எங்க பாத்திரங்களைப் புதுப் புதுப் பாத்திரமா வார்ப்பதற்காக அடித்து உடைத்து உருக்கிக் கொண்டிருப்பாங்க. அந்தப் பெரிய பாத்திரங்களிலே ரெண்டு, மூணு ஆள் கூட உள்ளாறப் புகுந்து உட்காரலாம். இப்ப விற்கிற காப்பர் விலை, பித்தளை விலையிலே, அதை எல்லாம் நல்லா விற்க முடியுது. பாத்திரங்களிலே ‘பாலஸ்-பீமநாதபுரம்’னு பேர் வெட்டியிருக்காங்க. கடைக்காரரு அதை உருக்கி வேற பாத்திரமாக்கறப்போ எப்பிடி அந்தப் பேர்களும் எழுத்துகளும் அழிஞ்சிடுமோ, அப்படியே எங்களைக் குறித்த, காலத்துக்கும் மணிபர்ஸுக்கும் ஒத்து வராத டம்பங்களும் ஆடம்பரங்களும் இன்றும் இனிமேலும் அழிந்துவிட வேண்டும் என்று நானே ஆசைப்படுகிறேன்.

இந்த நாலு மதில் சுவருக்கும் உள்ளே இவ்வளவு பெரிய மாளிகையிலே மொத்தம் எட்டு நூறு பல்புகளும், நூற்றைம்பது டியூப்லைட்டுகளும் இருநூற்று எழுபது மின்சார விசிறியும், நாலு கார்களும், ஏழு ஃபிரிஜிடேரும், நாலு ஏர்கண்டிஷன்