பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு கவியின் விலை

867

ஏர்ப்போர்ட் லவுன்ஜ் வாசனைகளாலும், வர்ணங்களாலும், பெண்களாலும் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நறுமலராக மலர்ந்து கொண்டிருந்தாற் போலிருந்தது. ஒவ்வொருத்தியிடமிருந்தும் ஒரு சுகமான இங்கித நறுமணம், பூ வாசனைப் பவுடர், ஏதோ ஒரு செண்ட், மூன்றும் கலந்து உருவான வாசனைக் கட்டணி, கண்கள் உணர்ந்து லயிக்க விரும்பும் வர்ணங்களும், நாசி விட்டுவிட விரும்பாத நறுமணங்களுமாக அப்போது அங்கே ஒரு வசீகரச் சூழ்நிலை உருவாகியிருந்தது.

சவர்லே, இம்பாலா, கடிலாக், பென்ஸ் என்று வரிசை வரிசையாக விமான நிலைய முகப்பில் நின்ற கார்களையும் ,தன்னுடைய காரையும் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் அவள். தன்னுடைய காரில் ஏறித் தன்னோடு உடன் வராமல், வேறு யாரோடாவது அந்தக் கவிஞன் போய் விடுவானோ என்று நினைக்கவும் கூட முடியாமல் தவித்தாள் அவள்.

விஜயா மறுபடி வியந்த குரலில் பேசத் தொடங்கினாள் : “உனக்குத் தெரியுமோ அது? அடுத்த மாதம் உலக சமாதானத்தை முன்னிட்டு ஜெனிவாவில் யூனெஸ்கோ கலாசாரப் பிரிவினர் ஒரு பெரிய கவி சம்மேளனத்திற்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறார்களாம். அதற்காக நம் நாட்டின் சார்பில் அனுப்பப்பட இருக்கிற ஒரே கவிஞராக இவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்காங்களாம்!”

“வேறே யார் அதற்குப் போக முடியும், இவரைத் தவிர!”

“அது சரி இந்து! இவர் ஏன் இன்னும் தனிக்கட்டையாகவே இருக்கிறார்? எங்களை விட இந்த விஷயம் உனக்குத்தான் அதிகம் தெரிஞ்சிருக்க முடியும்?”

“பதினான்கு வருஷங்களுக்கு முன் என் தலையில் வேறு விதமாக எழுதப் பட்டிருந்தால் இன்று அவர் தனிக்கட்டை ஆகியிருக்க முடியாது. இன்று நானும் இங்கே இப்படி உங்களோடு நின்று கொண்டிருக்க மாட்டேன். நீங்கள் இப்போது யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவரோடு கை கோர்த்தபடி விமானத்திலிருந்து கூட இறங்குவேன். ஒரு மாலை கொண்டு வந்திருப்பதற்குப் பதில் நீங்கள் எல்லோரும் இரண்டு மாலைகளோடு வந்திருக்க வேண்டியிருக்கும்” என்று கொஞ்சமும் தயங்காமல் விஜயாவுக்கு உடனே பதில் சொன்னாள் இந்து.

“இந்து திடீரென்று இன்றைக்குக் கல்யாணப் பெண் போல் அழகாயிருக்கிறாள்” என்று சிரித்துக் கொண்டே சொல்லி அவளை வம்புக்கு இழுத்தாள், அதுவரை சிறிது நேரம் பேசாமல் இருந்த ஹேமா.

“நான் மட்டுமென்ன? எல்லோருமே இன்று கல்யாணப் பெண்களைப் போலத்தான் சிங்காரித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.”

“என்ன சிங்காரித்துக் கொண்டு வந்து ஆகப்போவது என்ன? வருகிறவரை நீ கொத்திக் கொண்டு போகப் போகிறாய்.”

“டோண்ட் பி ஸில்லி”

விமான நிலைய முன்னறிவிப்பு ஒலித்தது. சில விநாடிகளில் அந்த விமானம் தரையிறங்கியது. தரையில் வேகமாக வந்து அமரும் வெண்ணிற அன்னப்