பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

868

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பறவையைப்போல் அழகாயிருந்தது அந்த ஆவ்ரோ 74 விமானம். எல்லாருடைய மனமும் பரபரப்பு அடைந்தது.

கவி குமுதசந்திரன் விமானம் நின்றதும் அதில் பொருத்தப்பட்டிருந்த படிக்கட்டுகளின் வழியே கீழே இறங்கி, லவுஞ்ஜுக்கு வருகிற வரை காத்திருக்க அவர்கள் யாருக்கும் பொறுமையில்லை. எல்லாரும் விமானம் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி ரன்வேயில் நடந்து போய் முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள். அப்படி விரைந்து சென்றவர்களில் முன்னால் இருந்தாள் இந்து. தோள்பட்டையிலும் கழுத்திலும் நெஞ்சிலும் எம்பிராய்டரி பூவேலை செய்த லக்னோ வெள்ளை வாயில் ஜிப்பாவும், அதே நிறத்தில் பைஜாமாவும் கூலிங் கிளாஸுமாக இறங்கி வந்தான் கவி குமுதசந்திரன். நல்ல சிவப்பு. பின்புறமாக வாரிய அமெரிக்கன் கிராப். சுருள் சுருளான கேசம். கருந்திராட்சைக் கொத்திலிருந்து ஒன்று தனியே விலகி வந்த மாதிரி முன் நெற்றியில் ஒரு சுருள் கேசம் அழகாக வந்து சரிந்திருந்தது. கவி மன்னனாகிய அவன் ரசிகர்கள் புடைசூழ இறங்கி நடந்து வருவது இளவரசன் பரிவாரங்களோடு வருவது போலிருந்தது. சிங்கம் நிமிர்ந்து நடந்து வருகிற மாதிரி ஒருவித ராஜ கம்பீர நடை அவனுடையதாயிருந்தது. இந்து புன்னகையோடு முன்சென்று தன்னைத் தானே அவனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“நான் இந்து! அந்த நாளில் உங்கள் பள்ளித் தோழி. இப்போது கூட நான் எழுதிய கடிதத்துக்கு நீங்கள் பதில் எழுதியிருந்தீர்கள். தங்குவதற்கு எல்லா ஏற்பாடும் நானே செய்து விட்டேன்.”

“உங்களை மறுபடியும் சந்திக்க நேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி.”

அவன் ‘உன்னை’ என்று சொல்லியிருந்தால், தன் இளமையையும், உரிமையையும் அங்கீகரித்தது போலிருக்குமே என்று ஏங்கினாள் அவள்.

மாலைகள் கழுத்தை நிறைத்தன. புகைப்படங்கள் எடுக்கப் பட்டன. கவியின் மிக அருகே அவனை வேறுயாரும் தங்களோடு தங்க அழைத்துக் கொண்டு போய் விடாமல் பாதுகாப்பாகவும், பிடிவாதமாகவும் அவள் நின்று கொண்டு தடுத்து விட்ட காரணத்தால் எல்லாப் புகைப்படங்களிலும் அவள் நிச்சயமாக உடன் இருப்பாள். நுண்கலைக் கழகத்தின் சார்பில் அழைக்கப்பட்டு வந்திருக்கிற அவனை ஒரு பொது இடத்தில் தங்குமாறு வற்புறுத்த வேண்டுமென்று எண்ணியிருந்தவர்கள் கூட அருகே நின்று அவனை ‘எஸ்கார்ட் செய்து, அழைத்துப் போவது போலிருந்த இந்துவின் முகத்தை முறித்துக் கொள்ளப் பயந்து பேசாமல் இருந்து விட்டார்கள். இந்துவுக்காக மட்டும் பயப்படவில்லை. அவள் மாதம் மூவாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரு பெரிய அதிகாரியின் மனைவி. அவளோடு தங்குவதை அந்தக் கவிஞனே விரும்புகிறானோ என்ற ‘டெலிகேட்டான’ சந்தேகம் வேறு எல்லாருக்கும் இருந்தது. அந்தத் தனிப்பட்ட சிநேகிதத்தை மாற்று உறைத்துப் பார்க்க அவர்கள் யாருமே விரும்பவில்லை.