பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு கவியின் விலை

869

“நான் பந்தயம் வேண்டுமானால் கட்டுகிறேன். பார்த்துக் கொண்டே இருங்கள். அவர் என்னோடுதான் தங்குவார்” என்று அவள் முன்கூட்டியே பெருமை அடித்துக் கொண்டிருந்ததனால் எல்லாருமே தயக்கத்தோடு அவளிடமே விட்டுவிட்டார்கள். இந்துமதியின் வீட்டில் அவனைத் தங்க விடாமல் தடுத்தால், அவளுக்குக் கோபம் வருமோ என்று கவலைப்பட்டதை விட அவனுக்கே அதனால் கோபம் வந்துவிடுமோ என்றுதான் அவர்கள் எல்லாருமே பயந்தார்கள்.

அழைத்தவர்கள் நாசூக்காக நடந்து கொள்ளாத கூட்டத்திலோ, கவியரங்கத்திலோ பேசவும் பாடவும் மறுத்துப் பாதியிலேயே கோபித்துக் கொண்டு போயிருப்பதாக இந்தக் கவிஞனைப் பற்றி நிறையச் சம்பவங்கள் கேள்விப்பட்டிருந்தார்கள் அவர்கள்.

“சாயங்காலம் நாலுமணிக்குக் கூட்டம். மூன்றரை மணிக்கு வந்து கூப்பிட்டுக் கொண்டு போக வருகிறோம்” என்று மட்டும் பயபக்தியோடு கவிஞனின் அருகே வந்து சொன்னார் நுண்கலைக் கழகக் காரியதரிசி,

“அவசியமில்லை; மூன்றே முக்காலுக்கு நானே இவரை அழைத்துக் கொண்டு வந்து விடுவேன்” என்று அவனைப் பதில் சொல்ல விடாமல் தானே முந்திக் கொண்டு அவனுக்காகப் பதில் சொன்னாள் இந்து.

கவிஞன் இதைக் கேட்டுப் புன்னகை பூத்தான். தான் காரியதரிசிக்குச் சொல்லிய பதிலை அந்தப் புன்னகை மூலம் அவனும் அங்கீகரிப்பதாக இந்து புரிந்து கொண்டாள். மாலைக் குவியல்களுக்கு நடுவே காரில் பின்சீட்டில் கவிஞன் அமர்ந்திருந்தான். டிரைவிங் அவள் பொறுப்பாக இருந்தது. கார் நகர்ந்ததும், யாரோ ஒருத்தி இன்னொருத்தியிடம், “இந்து ஒரு கவியை அழைத்துச் செல்கிற மாதிரி அவரை அழைத்துப் போகவில்லை. கைதியை இழுத்துப் போகிற மாதிரி இழுத்துப் போகிறாள்” என்று குத்தலாகச் சொல்லியது அவள் காதிலேயே அரைகுறையாக விழுந்தது. அவன் காதிலும் விழுந்திருக்குமோ என்று அவளுக்கு பயமாக இருந்தது. செய்கிற உபசாரத்தில் இந்த வார்த்தைகளை அவன் கேட்டே இருந்தாலும், மறந்து போகும்படி பண்ணி விடலாம் என்று நம்பினாள் அவள்.

இந்து காரை லாவகமாக ஓட்டிக் கொண்டே அவனோடு பேச்சுக் கொடுத்தாள்:

“என் கணவர் ஊரில் இல்லை; டில்லிக்குப் போயிருக்கிறார். நீங்கள் வரப் போவதும் நம் வீட்டில் தங்கப் போவதும் அவருக்குத் தெரியும். நீங்கள் வருகிற நேரத்தில் தான் வீட்டில் இருந்து உபசரிக்க முடியாமற் போனதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார் அவர்.”

“அடடா, உங்களுக்கு வீண் சிரமம். அவர் ஊரில் இல்லாதபோது...”

“தான் இல்லை என்ற குறை வைக்காமல் கண்ணுங்கருத்துமாக உங்களைக் கவனித்துக் கொள்ளும்படி அவரே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.”

அழகிய அடர்ந்த தோட்டத்திற்குள் புகுந்து நெடுந்தூரம் உள்ளே சென்று ‘போர்டிகோவில்’ கார் நின்றது. அவள் அவசர அவசரமாக முன்பக்கக் கதவைத் திறந்து