பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

870

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கொண்டு இறங்கி வந்து பின் கதவைத் திறந்து விட்டாள். ஒரு கையில் சூட்கேசும் மற்றொரு கையில் ரோஜாப் பூ மாலைகளுமாக இறங்கினான் அவன்.

“என்னிடம் கொடுங்கள்! நான் கொண்டு வருகிறேன்” என்று மாலை, பெட்டி இரண்டையுமே வாங்கிக்கொள்ளக் கைகளை நீட்டினாள் அவள். பெட்டியை வைத்துக் கொண்டு மாலைகளை மட்டுமே நீட்டினான் அவன். மாலைகளை வாங்குவதற்குள் அவனது பூப் போன்ற கையை ஒரு தரம் நன்றாக ஸ்பரிசிக்க முடிந்தது அவளால். போலியாக ஒரு மன்னிப்பும் கேட்டாள் அவள்.

“மன்னிக்க வேண்டும்! உங்கள் கை எது, ரோஜாப் பூ மாலை எது என்று தெரியவில்லை. இரண்டும் ஒரே நிறமாக இருக்கின்றன.”

“நான் அவ்வளவு சிவப்பில்லை. ரொம்பவும் என்னைப் புகழ்கிறீர்கள் நீங்கள்.”

“நீங்கள் எவ்வளவு சிவப்பு என்று உங்களுக்கே எப்படித் தெரியும்? உங்கள் அழகை நாங்கள்தானே சொல்ல முடியும்?”

“நானே அழகைத் தேடிக் கொண்டிருப்பவன், கவிஞன். நீங்கள் என்னிடம் எப்படி அதைத் தேட முடியும்”

“கவிதையைப் போலவே பேசவும் செய்கிறீர்கள்.”

“இதைச் சொல்வதிலிருந்து உங்களுக்கு எவ்வளவு தூரம் கவிதை ரசனை இருக்கிறது என்பதுதான் தெரிகிறது.” என்று கொஞ்சம் குத்தலாகப் பதில் வந்தது அவனிடமிருந்து. இந்துவுக்கு அது கிண்டல் என்று புரிந்தாலும் பதிலுக்கு அவள் அவனைச் சாடவில்லை.

“நான் ஏதாவது தப்பாகச் சொல்லியிருந்தாலும், தயவுசெய்து மன்னித்து விடுங்கள்” என்று மேலும் பணிவாக இறங்கிப் பேசினாள் அவள். காரியத்தைச் சாதிக்க முடிந்த பணிவினால் தவறு எதுவும் கிடையாது.

ஹாலில் அவனை உட்கார வைத்து விட்டு,”சீதா, சீதா' என்று உட்புறம் நோக்கிக் குரல் கொடுத்தாள் இந்து. அவளை விட உடற்கட்டும் இளமையும் உள்ள இன்னொரு யுவதி வந்தாள். சின்னப் பெண்தான். ஆனால் இந்துவை விடத் துறுதுறு வென்றிருந்தாள். இந்துவை விட லட்சுமீகரமான களையுள்ள முகம் அவளுடையது. “ஐயாவோட சூட்கேஸை ஏ.ஸி. ரூம்லே கொண்டு போய் வை.” என்று இந்து அந்தப் பெண்ணுக்குக் கட்டளையிட்டதிலிருந்து அவள் வேலைக்காரி என்று அநுமானிக்க முடிந்தது. முன்னும், பின்னும், பக்கங்களிலும், எப்படிப் பார்த்தாலும் தாமிரத்தில் செதுக்கி எடுத்தது போன்ற நிறத்தில் வடிவில் அவள் சூட்கேஸை எடுத்துக் கொண்டு நடந்த போது அந்த நடையோடு கூடிய முதுகுப் புறமும் கால்களும் மிக நளினமாக இயங்குவதை அவன் பார்த்தான்.

அவன் அவளை அப்படிப் பார்ப்பது பிடிக்காதவள் போல் “எங்க வேலைக்காரி! நம்ம பக்கம்தான். சின்ன வயசிலேயே வந்தா, மத மதன்னு வளர்ந்துட்டா. ரொம்ப நல்லாச் சமைக்கிறா. எஸ்.எஸ்.எல்.ஸி. வரை படிச்சிருக்கா. அவளுக்கும் உங்கள் கவிகள்னா உயிர்.”